சிக்குறாங்க…. மல்லையாவுக்கு கடன் கொடுத்த வங்கி அதிகாரிகள், இயக்குநர்களுக்கு ‘வலை’!

First Published Oct 9, 2017, 12:47 PM IST
Highlights
Kingfisher probe Officials directors under lens for violations


வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று லண்டனில் இருக்கும் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு வங்கி விதிமுறைகளை மீறி கடன் கொடுத்த அதிகாரிகள், இயக்குநர்களை, அரசு அதிகாரிகளை விசாரணை செய்ய விசாரணை அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

ரூ. 9 ஆயிரம் கோடி

கிங் பிஷர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் அதிபர் விஜய் மல்லையா வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்றார். ஆனால், அதை திருப்பிச் செலுத்த முடியாமல், லண்டனுக்கு தப்பி ஓடி அங்கு வாழ்ந்து வருகிறார். அவரை மீண்டும் இந்தியா கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

பரிந்துரை

இந்நிலையில், மல்லையாவின் கிங்  பிஷர் விமான நிறுவனம் செய்த தவறுகள் குறித்து விசாரணை செய்த தீவிர மோசடி குற்றங்களை விசாரிக்கும் அலுவலகம்(எஸ்.எப்.ஐ.ஓ.) சமீபத்தில் அறிக்கை அளித்துள்ளது. அதில், வங்கி விதிமுறைகளை மீறி மல்லையா நிறுவனத்துக்கு கடன் கொடுத்த வங்கி அதிகாரிகள், இயக்குநர்கள், அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளது.

கடமையைச் செய்யவில்லை

இது குறித்து விசாரணை அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகையில், “ மல்லையாவின் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள்  கம்பெனி சட்டத்தை மீறி ஏராளமான தவறுகளைச் செய்துள்ளனர், குறிப்பாக நிறுவனத்தின் இயக்குநர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியைச் செய்யவில்லை.

வங்கி அதிகாரிகளைப் பொருத்தவரை, மல்லையா நிறுவனத்துக்கு கடன் கொடுத்ததில் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள், நெறிமுறைகளை பின்பற்றவில்லை. மல்லையா நிறுவனத்துடன் அரசு அதிகாரிகளும் சிலர் சேர்ந்து கொண்டு சதி செய்து கடன் பெற உதவியுள்ளனர். கடன் கொடுத்த அனைத்து வங்கிகளின் அதிகாரிகளும் தங்களின் பொறுப்பை, கடமையை உணராமல் பணியாற்றியுள்ளனர். விதிமுறைகளை மீறியுள்ளனர்.

தகுதியில்லை

மல்லையாவின் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வரவு-செலவு அறிக்கை லாபத்தில் இல்லாமல் இருந்துள்ளது. கடன் பெற தகுதியும் இல்லை, அப்படி இருக்கும்போது, கடன் கொடுக்கும்விதிமுறைகளை மீறி அந்த நிறுவனத்துக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு மதிப்பீட்டு அறிக்கை

வங்கிகள் ஒருவரின் மதிப்பீட்டு அறிக்கையை மட்டும் ஆய்வுசெய்து அதன் அடிப்படையில் கடன் கொடுத்துள்ளனர். ஆனால், விதிமுறைப்படி இருவர் கடன்கேட்பவரின் சொத்துக்களை மதிப்பீடுசெய்து அறிக்கை அளித்தபின் அந்த அறிக்கையை ஒப்பிட்டு பார்த்து கடன் அனுமதி வழங்க வேண்டும். ஆனால், எந்த விதிமுறையும் இதில்  பின்பற்றப்படவில்லை

ஆதலால், மல்லையா நிறுவனம் கடன் பெற உதவிய வங்கி அதிகாரிகள், இயக்குநர்கள், அரசு அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்படும்’’  என தெரிவித்தனர்.

click me!