கேரள தங்க கடத்தல் வழக்கு.. ஸ்வப்னா சுரேஷ் வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு.. முதல்வருக்கு முற்றும் நெருக்கடி?

By vinoth kumarFirst Published Jun 11, 2022, 12:17 PM IST
Highlights

மாநில அரசின் சக்திவாய்ந்த நபர்களுடன் தொடர்புடைய ஜார்ஜ் கிரணை குறிப்பிட்டு உரையாடல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நீதிமன்றத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் வாக்குமூலம் அளித்தது ஏன்? தங்க கடத்தலில் முதலமைச்சர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு தொடா்புள்ளது என்ற குற்றச்சாட்டை பினராயி விஜயன் சகித்துக்கொள்ள மாட்டாா். எனவே, இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஸ்வப்னா சுரேஷிடம் ஷாஜ் கிரண் பேசுவது பதிவாகியுள்ளது. 

கேரள தங்க கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சி போர்க்கொடி உயர்த்தி வரும் நிலையில், அதற்கு வலுசேர்க்கும் வகையில் முக்கிய ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு, கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் சரக்கு பெட்டிகளில் சுமார் 30 கிலோ கடத்தல் தங்கம் இருந்துள்ளது. இந்தக் கடத்தலில் தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்பிருக்கலாம் எனக் கருதப்பட்டதால், இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்த தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள், இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக கேரள அரசின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரேஷ், அவரது நண்பர் சந்தீப் நாயர், பி.எஸ். சரீத் உட்பட 12 பேரை கைது செய்தனர்.

இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக முதல்வரின் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனும் கைது செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், ஸ்வப்னா சுரேஷ், சிவசங்கரன் உள்ளிட்டோர் ஜாமீனில் உள்ளனர். இதனிடையே, இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய புள்ளிகளின் பெயர்களை வெளியிடுவேன் என ஸ்வப்னா சுரேஷ் அண்மையில் கூறியிருந்தார். அதன்படி, பணமோசடி தடுப்பு நீதிமன்றத்தில் அவர் ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதில், தங்கக் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது மனைவி கமலா, மகள் வீணா உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்திருந்தார். இது கேரள அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனை முதல்வர் பினராயி விஜயன் திட்டவட்டமாக மறுத்தார்.

இதையடுத்து பினராயி விஜயன் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. இந்நிலையில், பாலக்காட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்வப்னா சுரேஷ்;- மாநில அரசின் சக்திவாய்ந்த நபர்களுடன் தொடர்புடைய ஜார்ஜ் கிரணை குறிப்பிட்டு உரையாடல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நீதிமன்றத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் வாக்குமூலம் அளித்தது ஏன்? தங்க கடத்தலில் முதலமைச்சர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு தொடா்புள்ளது என்ற குற்றச்சாட்டை பினராயி விஜயன் சகித்துக்கொள்ள மாட்டாா்.

எனவே, இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஸ்வப்னா சுரேஷிடம் ஷாஜ் கிரண் பேசுவது பதிவாகியுள்ளது. மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த உரையாடல் பதிவை வெளியிட்டுள்ளேன். நான் குற்றவாளி என்பதை ஒப்புக்கொள்கிறேன். நீதிமன்றத்தின் மீதும்  இந்த வழக்கை விசாரித்து வரும் புலனாய்வு  அமைப்புகள் மீதும் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார்.  

click me!