ஜம்மு காஷ்மீரில் கடும் துப்பாக்கி சண்டை : தீவிரவாதி சுட்டுக்கொலை!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே இன்று காலை கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்புடைய முக்கிய தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
ஜம்மு காஷ்மீரையொட்டிய இந்திய எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் ராணுவத்தினரும், தீவிரவாதிகளும் தொடர்ந்து ஊடுருவும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ராணுவத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இன்று அதிகாலை பத்காம் மாவட்டத்தில் உள்ள மச்சூ என்ற பகுதியில் தீவிரவாதிகள் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதால், பதிலுக்கு ராணுவத்தினரும் தீவிர தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் முசாஃபர் அகமது என்ற தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். அவன், லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்புடைய அல்பதர் என்ற இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பது தெரியவந்துள்ளது.