ஐ.என்.எக்ஸ் மீடியா முறையீடு விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் அவர் ஆஜராகியுள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் வெளிநாட்டு முதலீட்டுக்கான அனுமதி விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றுள்ளார் என சிபிஐ வழக்கு பதிவு செய்தது. ஆனால் விசாரனைக்கு கார்த்தி சிதம்பரம் சிபிஐ முன்பு ஆஜராகவில்லை என்பதால் தேடப்படும் நபர் என்கிற லுக் அவுட் நோட்டீஸை சிபிஐ பிறப்பித்தது. இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து லுக் அவுட் நோட்டீஸுக்கு தடை பெற்றார் கார்த்தி. இதை எதிர்த்து சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மேலுமுறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் உயர்நீதிமண்டரத்தின் உத்தரவுக்கு தடை விதித்தது. மேலும் சிபிஐ முன்பு ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இதைதொடர்ந்து, சென்னை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராவதாக கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் சிபிஐ முன்பு ஆஜராவதில் என்ன தயக்கம் என கேள்வி எழுப்பியது. மேலும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி சிபிஐ முன் அவர் ஆஜராக வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து கார்த்தி சிதம்பரம் இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் அவர் ஆஜராகியுள்ளார்.