
சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் இன்று நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். இதனை முன்னிட்டு பெங்களூரு நகர காவல்துறை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு போக்குவரத்து மாற்றங்களை அறிவித்துள்ளது.
வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாகனங்களை நிறுத்த போலீசார் தடை விதித்துள்ளனர்.
“வாக்கு எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, பின்வரும் மையங்களில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன, மேலும் வாக்கு எண்ணும் மையங்களிலும் அதைச் சுற்றியும் வாகனங்களை நிறுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று பெங்களூரு போக்குவரத்து போலீஸார் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.
Karnataka Election Result 2023 Live: கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!
விட்டல் மல்லையா சாலையில் உள்ள செயின்ட் ஜோசப் இந்தியன் உயர்நிலைப் பள்ளி, காம்போசிட் பி.யூ. கல்லூரி, பிளேஸ் சாலையில் உள்ள மவுண்ட் கார்மல் கல்லூரி, பசவனகுடி தேசியக் கல்லூரி மற்றும் தேவனஹள்ளியில் உள்ள ஆகாஷ் சர்வதேசப் பள்ளி ஆகிய இடங்களில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க, சனிக்கிழமை பெங்களூரு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என பெங்களூரு போலீஸார் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை காலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்.
பெங்களூரு போலீஸ் கமிஷனரேட் பகுதியில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, மே 13 ஆம் தேதி காலை முதல் மே 14 ஆம் தேதி காலை வரை ஆயுதப்படைகள் உஷார் நிலையில் வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.