எய்மஸ் மருத்துவமனையின் மூத்த டாக்டர் கொரோனாவிற்கு பலி..! டெல்லியில் அதிர்ச்சி..!

By Manikandan S R SFirst Published May 24, 2020, 2:32 PM IST
Highlights

டெல்லியைச் சேர்ந்தவர் மருத்துவர் ஜிதேந்திர நாத் பாண்டே(79). அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) மூத்த மருத்துவரான இவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நுரையீரல் துறை இயக்குனராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி வந்தார். 

உலக அளவில் பெரும் நாசங்களை விளைவித்து வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. கடந்த சில தினங்களாக தினமும் 3000 நபர்களுக்கு மிகாமல் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு வரும் நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி நாட்டில் 1,31,423 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. கொரோனா நோய் பாதிப்பின் தீவிரத்தால் 3,868 பேர் பலியாகி இருக்கின்றனர்.

நாடு முழுவதும் தற்போது 73,170 பேர் தொடர் சிகிச்சையில் இருக்கின்றனர். நாட்டின் அனைத்தும் மாநிலங்களில் இருந்தும்  54,385 மக்கள் கொரோனா நோயில் இருந்து பூரண நலம் பெற்று தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அதிர்ச்சி தரும் செய்தியாக பிரபல மருத்துவர் ஒருவர் இந்தியாவில் கொரோனா நோய்க்கு பலியாகி இருக்கிறார். டெல்லியைச் சேர்ந்தவர் மருத்துவர் ஜிதேந்திர நாத் பாண்டே(79). அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) மூத்த மருத்துவரான இவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நுரையீரல் துறை இயக்குனராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி வந்தார். 

இவருக்கு அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. பரிசோதனைகள் மேற்கொண்டதில் பாண்டேவிற்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த அவர் நோயின் தீவிரத்தால் மரணமைந்துள்ளார். அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சையில் உள்ளார். கொரோனா தொற்றால் ஜிதேந்திர நாத் பாண்டே உயிரிழந்திருப்பதை டெல்லியின் மூத்த மருத்துவர் டாக்டர் சங்கீதா ரெட்டி உறுதிப்படுத்தியிருக்கார். இது தொடர்பாக ட்விட்டரில் கூறியிருக்கும் அவர், எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் நுரையீரல் துறை இயக்குனரும், பேராசிரியர் டாக்டர் பாண்டேவை கொரோனா எடுத்துக்கொண்டது என்று கூறியதைகேட்டு மிகவும் வருத்தமடைகிறோம். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல் என பதிவிட்டுள்ளார்.

கொரோனா நோய்க்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. தற்போது வரை தலைநகர் டெல்லியில் 12,319 பேர் பாதிக்கப்பட்டு 208 பேர் பலியாகி இருக்கின்றனர். 

click me!