ஜெயலலிதாவுடன் சிக்கிய வழக்கு... 23 ஆண்டுகளுக்குப் பிறகு தப்பினார் அமைச்சர் செங்கோட்டையன்..!

By vinoth kumarFirst Published Jul 9, 2019, 11:51 AM IST
Highlights

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர் செங்கோட்டையன் மீதான பரிசுப் பொருள் வழக்கை உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர் செங்கோட்டையன் மீதான பரிசுப் பொருள் வழக்கை உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. 

கடந்த 1992-ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது பிறந்த நாளில் பல்வேறு இடங்களில் இருந்த பரிசுகள் வந்தன. இதில் 57 பேரிடமிருந்து 89 டிடிகளும், 3 லட்சம் அமெரிக்க டாலரும், ரொக்கப்பணமும் மொத்தம் ரூ.2 கோடி வந்தது. முதல்வராக பதவி வகித்து வருபவர் தனக்கு வரும் அன்பளிப்பு மற்றும் பரிசுகளை அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும். 

ஆனால், ஜெயலலிதா தனது சொந்த வங்கிக் கணக்கில் இந்த பரிசு பணத்தை டெபாசிட் செய்துள்ளார். இது குறித்து கடந்த 1996-ல் சிபிஐ விசாரணை நடத்தி ஜெயலலிதா மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் பரிசுப் பணத்திற்கு ஏற்பாடு செய்ததாக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து 2011-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

இந்த வழக்கு சுமார் 23 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட பரிசு பொருள் வழக்கில் இருந்து அமைச்சர் செங்கோட்டையனை உச்சநீதிமன்றம் விடுவித்துள்ளது. ஜெயலலிதா மற்றும் அழகு திருநாவுக்கரசு இறந்துவிட்டதால், அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். மேலும் விசாரணையை சிபிஐ கால தாமதமாக கையாண்டதால் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை எனக்கூறி வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

click me!