
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற என்கவுன்டரில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீரில் அவ்வப்போது பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தின் ஹலன் வனப் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, தீவிரவாதிகளுடன் நடைபெற்ற என்கவுன்டரில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை என்கவுண்டராக மாறியது. பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். துப்பாக்கிச் சண்டையில், மூன்று பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்தனர், பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்திய ராணுவம் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் “ குல்காமில் உள்ள ஹலானின் உயரமான பகுதிகளில் பயங்கரவாதிகள் இருப்பது குறித்து கிடைத்த தகவல்களின் பேரில், ஆகஸ்ட் 04 அன்று பாதுகாப்புப் படையினரால் தேடுதல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில், மூன்று வீரர்கள் காயம் அடைந்து பின்னர் உயிரிழந்தனர். தேடுதல் நடவடிக்கைகள் தொடர்கின்றன. ," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அந்த பகுதியை ராணுவம் சுற்றி வளைத்துள்ளதாகவும், தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.