இமாச்சலப் பிரதேச மாநில முதல்வராக பா.ஜனதா தலைவரும் எம்.எல்.ஏ.வுமான ஜெய்ராம் தாக்கூர் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.
சிம்லாவில் உள்ள ரிட்ஜி மைதானத்தில் நடந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பா.ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, பா.ஜனதா ஆளும் மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பா.ஜனதா வெற்றி
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் 68 தொகுதிகளுக்கும் சமீபத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்தது. இதில் 44 தொகுதிகளில் பா.ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றது. ஆனால், அந்த கட்சியின் முதல்வர் வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான பிரேம் குமார் துமால் சுஜான்பூரில் தோல்வி அடைந்தார்.
ஜெய்ராம் தேர்வு
இதனால், முதல்வராக யாரைத் தேர்வு செய்வதில் என்பதில் குழப்பமும், இழுபறியும் நீடித்தது. இதில் பிரேம் குமார் தரப்பினரும், 5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த ஜெய்ராம் தாக்கூர் தரப்பினருக்கும் மோதல் போக்கு நிலவியது. இதையடுத்து, பா.ஜனதா மேலிடம் தலையிட்டு சமாதானம் செய்ததையடுத்து, ஜெய்ராம் தாக்கூரை எம்.எல்.ஏ.க்கள் முதல்வராக தேர்வு செய்தனர்.
பதவி ஏற்பு
கடந்த 25-ந்தேதி ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்தைச் சந்தித்து ஆட்சி அமைக்க ஜெய்ராம் தாக்கூர் உரிமை கோரி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்தை அளித்தார். இதை ஏற்றுக்கொண்ட ஆளுநர் அழைப்பின் பெயரில் நேற்று சிம்லா நகரில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
முதல்முறையாக ஜெய்ராம் தாக்கூர் முதல்வராக பதவி ஏற்றார். இவருக்கு ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
30 ஆயிரம் தொண்டர்கள்
பதவி ஏற்பு விழா நடந்த ரிட்ஜ் மைதானத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பா.ஜனதா தொண்டர்கள் மேளங்களை ஒலித்தும், பாடல்களைப் பாடியும் உற்சாகமாகக் காணப்பட்டனர்.
முக்கிய தலைவர்கள்
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பா.ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய உள்துறை அமைச்சர்ராஜ் நாத் சிங், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திரபட்நாவிஸ் , அசாம் முதல்வர் சர்பானந்த சோனாவால் உள்ளிட்டோரும், மத்திய அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
தொண்டர்கள் பார்க்கும் வகையில் 9 இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு, பதவி ஏற்பு விழாவை காண வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. ஜெய்ராம் தாக்கூரின் மனைவி, தாய் உள்ளிட்ட குடும்பத்தாரும் இந்த விழாவில் பங்கேற்று இருந்தனர்.
அதிகமான நம்பிக்கை
பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, “ இமாச்சலப் பிரதேச முதல்வராக பதவி ஏற்ற ஜெய்ராம் தாக்கூருக்கும், அமைச்சர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான அரசு முழுவீச்சில், தளரா ஊக்கத்துடன் செயல்பட்டு, மக்கள்பணியாற்றுவார்கள் என நம்புகிறேன்’’ என அவர் தெரிவித்தார்.