ராணியின் 400 ஆண்டு கால சாபம்! காவிரி கரையில் இருந்தும் பாலைவனமான கிராமம்! இந்த கதை தெரியுமா?

Published : Jun 16, 2025, 05:05 PM IST
Queen Alamelamma

சுருக்கம்

மைசூருவில் காவிரி ஆற்றங்கரையில் உள்ள தலக்காடு ராஜஸ்தான் பாலைவனம் போல் உள்ளது. ராணியின் சாபத்தால் இந்த நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்ப்போம்.

Mysore Talakadu Turned Into A Desert Due To The Queen Alamelamma Curse?: கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து 45 கிமீ தொலைவில் உள்ளது தலக்காடு. காவிரி ஆற்றின் கரையில் இருந்தாலும் இந்த தலக்காடு ஒரு பாலைவனம் போல் இருக்கிறது. முழுவதும் மணல் குன்றுகளால் இந்த ஊரே மூட்டப்பட்டுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்ட கோயில்கள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. தலக்காடு கிட்டத்தட்ட ஒரு மைல் நீளத்திற்கு மணல் திட்டுகளால் மூடப்பட்டுள்ளது. சில கோயில் கோபுரங்களின் உச்சி மட்டுமே தெரியும்.

ராணியின் 400 ஆண்டு கால சாபம்

இயற்கை பேரழிவு காரணமாக தலக்காட்டை மணல் மூடியதாக கூறப்படும் நிலையில், ஒரு ராணியின் 400 ஆண்டு கால சாபமே தலக்காடு இந்த நிலைமைக்கு இருக்க காரணம் என சில கட்டுக்கதைகள் கூறுகின்றன. அது என்ன கதை? என்பது குறித்து பார்க்கலாம். அதாவது 1612ம் ஆண்டு, மைசூருக்கு அருகிலுள்ள ஸ்ரீரங்கப்பட்டினத்தை திருமலராஜா என்ற மன்னர் ஆட்சி செய்து வந்தார். மன்னர் நீண்ட காலமாக ஒரு நோயால் அவதிப்பட்டு வந்தார். அந்த நோய் குணமடைய தலக்காட்டில் உள்ள ஒரு கோயிலுக்கு யாத்திரை சென்றார்.

நோயால் இறந்த மன்னர்

மன்னர் இல்லாத நேரத்தில் அவரது மனைவியான ராணி அலமேலம்மா ஸ்ரீரங்கப்பட்டினத்தை ஆட்சி செய்தார். பின்பு மன்னர் இறந்தார். இதை கேள்விப்பட்டதும் ராணி, மைசூர் மன்னர் ராஜா வாடியாரின் பராமரிப்பில் ராஜ்யத்தை விட்டுவிட்டு, தலக்காடுக்கு விரைந்து செல்ல முடிவு செய்தார். ராஜா வாடியார் ஒரு தீய சந்தர்ப்பவாதியாக இருந்ததால், அவர்கள் இல்லாத நேரத்தில் ஸ்ரீரங்கப்பட்டினத்தை முழுமையாக ஆக்கிரமித்தார்.

தீய மன்னர் ராஜா வாடியார் பிடியில் பேரரசு

இதை அறிந்த ராணி, ரங்கநாயகி கோயிலில் பாதுகாக்கப்பட்ட அனைத்து விலைமதிப்பற்ற தங்க நகைகளையும் எடுத்துக்கொண்டு அவற்றை பாதுகாப்பான இடத்தில் வைக்க தலக்காடு நோக்கி சென்றார். ஆனால் தீய மன்னர் ராஜா வாடியார் ஒரு பேராசை கொண்டவராகவும், விலைமதிப்பற்ற நகைகளை விரும்புவதாகவும் இருந்ததால், ராணியையும், நகைகளையும் கண்டுபிடிக்க வீரர்கள் படையை தலக்காட்டுக்கு அனுப்பினார்.

தற்கொலை செய்த ராணி அலமேலம்மா

ராணி அலமேலம்மா படை வீரர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சித்தும் முடியவில்லை. புனிதமான கோயில் நகைகள் ராஜா வாடியார் கைக்கு சென்று விடக் கூடாது என்று முடிவெடுத்த ராணி அலமேலம்மா தலக்காட்டில் காவிரி ஆற்றின் ஒரு இடத்தில் நகைகளுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அவர் வைத்தியநாதேஸ்வர் சுவாமியிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தார்.

ராணியின் சாபம் என்னென்ன?

''நான் என் வாழ்நாள் முழுவதும் உங்கள் உண்மையான பக்தராக இருந்திருந்தால் நான் இறக்கும் இந்த நேரத்தில் என் வேண்டுதலை நிறைவேற்றுங்கள். தலக்காடு ஒரு தரிசு நிலமாக மாறட்டும், மலங்கி ஒரு சுழலாக மாறட்டும், மைசூர் மன்னர்களுக்கு ஒருபோதும் குழந்தைகள் பிறக்கக்கூடாது'' என்று சாபம் விட்டு உயிரை விட்டார் ராணி அலமேலம்மா.

இன்று வரை அந்த சாபம் பலிக்கிறதா?

அலமேலம்மா சொன்ன இந்த சாபம் இன்று வரை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இன்று வரை உடையார் வம்சத்தில் குழந்தை பாக்கியம் இல்லை என கூறப்படுகிறது. இதேபோல் காவிரி ஆற்றுக்கு அருகில் இருப்பதால் மிகவும் வளமானதாக இருக்க வேண்டிய தலக்காடு அதற்கு எதிர்மாறாக முழுமையாக ராஜஸ்தான் போல் பாலைவனமாக உள்ளது.

தெய்வமாக மாறிய ராணி

இதற்கிடையே ராணியின் மரணம் மற்றும் அவரது சாபத்தைப் பற்றி கேள்விப்பட்ட ராஜா உடையார் மனந்திரும்பி, ராணி அலமேலம்மாவின் சிலையை தங்கத்தால் செய்து, மைசூர் அரண்மனையில் வைத்து, அவளை ஒரு தெய்வமாக வணங்கினார். அன்றிலிருந்து ராணி வணங்கப்பட்டு வருகிறார். இன்றும் கூட, ஒரு பெட்டியில் பாதுகாக்கப்பட்ட அவரது தலைமுடியின் ஒரு இழை உள்ளது, மேலும் அவரது பெரிய முத்து ரங்கநாயகி தேவியை அலங்கரிக்கிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

யார் இந்த ஶ்ரீலேகா? திருவனந்தபுரத்தில் பா.ஜ.க.வின் முதல் மேயர் ஆவாரா?
கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு - முழு விபரம் உள்ளே