மல்லையா நாடு கடத்தப்படுவாரா? - லண்டன் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

First Published Jun 13, 2017, 12:46 PM IST
Highlights
investigation on malla in london court


வங்கியில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் லண்டனில் தலைமறைவாக இருக்கும் தொழிலதிபர் விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு அழைத்துவருவது தொடர்பான மனு லண்டன் வெஸ்ட்மினிஸ்டர்ஸ் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

தொழிலதிபர் விஜய் மல்லையா தான் நடத்திய கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்காக ரூ.9 ஆயிரம் கோடி வங்கியில் கடன் பெற்று திருப்பிச்செலுத்தாமல் லண்டனில் தலைமறைவானார். இவர் மீது பல்வேறு செக்மோசடி வழக்குகள், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகள் ஆகியவற்றின் கீழ் ஜாமீனில் வெளிவரமுடியாத கைது வாரண்ட்டை நீதிமன்றம் பிறப்பித்தது. மேலும், தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.

இதையடுத்து, மல்லையாவின் பாஸ்போர்ட்டை மத்தியஅரசு முடக்கி, அவரை நாடு கடத்தும் பணிகளை தொடங்கியது. இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் 8-ந்தேதி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு முறைப்படி வேண்டுகோள்விடுத்தது. இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை காரணமாக, கடந்த ஏப்ரல் 18-ந்தேதி விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்து யார்டு போலீசார் கைது செய்தனர்.

லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர்ஸ் நீதிமன்றத்தில் மல்லையா ஆஜர்படுத்தப்பட்டபோதிலும், கைது செய்யப்பட்ட 3 மணிநேரத்தில் ஜாமீனில் விடுதலையானார். இதையடுத்து மல்லையாவுக்கு எதிரான ஆதராங்கள், ஆவணங்களை எடுத்துக்கொண்டு சி.பி.ஐ. அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் 4பேர் கொண்ட குழு கடந்த மாதம் லண்டன் சென்றனர். அங்கு இங்கிலாந்து கிரவுன் வழக்கறிஞர் சேவை அமைப்பு இந்தியாவின் சார்பில் வாதடவுள்ளது. அவர்களிடம் ஆதாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே ஜாமீனில் வெளியேவந்துள்ள விஜய் மல்லையா, இங்கிலாந்தில் நடந்துவரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாடும் ஆட்டங்களை பார்த்து வருகிறார், மேலும், இந்திய அணியின் கேப்டன் கோலி நடத்திய ஒரு நிதிதிரட்டும் விழாவிலும் அழையா விருந்தாளியாக மல்லையா சென்றுவந்தார்.

இந்நிலையில், விஜய் மல்லையாவை இந்தியா அழைத்து வருவது தொடர்பாக வெஸ்ட்மனிஸ்டர்ஸ் நீதிமன்றத்தில் ஸ்காட்லாந்து போலீசார் தொடர்ந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

click me!