
இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற நாள் முதல், பல்வேறு வெளிநாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் ஒவ்வொரு முறை மோடி வெளிநாடுகளுக்கு செல்லும்போது அந்த பயணம் கடுமையாக விமர்சிக்கப்படுவது வழக்கம்.
கடந்த 2016 முதல் 2017 வரை நரேந்திர மோடியின் விமான பயண விவரங்கள், அவர் சென்ற வெளிநாடுகள், தங்கியிருந்த நாட்கள், பயணித்த இடங்கள் அதற்கு ஆன செலவு உள்ளிட்ட தகவல்களை ஏர் இந்தியா நிறுவனம் உரிய ஆவணங்களுடன் வெளியிட வேண்டும் என லோகேஷ் பத்ரா என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்டு இருந்தார்.
ஆனால் பிரதமர் அலுவலகத்தின் அறிவுறுத்தல் பேரால், மோடியின் விமான பயணங்கள் மற்றும் அதற்கு ஆன செலவு கணக்குகளை வெளியிட முடியாது என ஏர் இந்தியா நிறுவனம் லோகேஷ் பத்ராவின் மனுவுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து லோகேஷ் பத்ரா, சமீபத்தில் மத்திய தகவல் ஆணையத்தில் இந்த விவகாரம் தொடர்பாக மனு முறையீடு செய்தார். அதை ஏற்ற மத்திய தகவல் ஆணையர் அமித்வா பட்டாச்சாரியா தனது உத்தரவை வெளியிட்டார்.
அதன்படி பிரதமர் மோடியின் விமான பயணங்கள், அது தொடர்பான செலவீனங்கள் அனைத்திற்குமான கட்டணங்களுக்கு மத்திய கருவூலத்தில் இருந்து தான் பணம் அளிக்கப்பட்டுள்ளன. அதனால் அது தொடர்பான விவரங்களை வெளியிட கோரும் போது வர்த்தக ரகசியம் காத்தல் என்பது ஏற்கக்கூடியது அல்ல
அதனால் ஏர் இந்தியா நிறுவனம், தேதிவாரியாக பிரதமர் மோடியின் விமான பயணத்திற்கு வசூலிக்கப்பட்ட கட்டண விவரங்களை தேதி வாரியாக வெளியிட வேண்டும் என் அமித்வா உத்தரவு பிறப்பித்தார்.