இந்தியாவின் 58 % சொத்துக்கள் 1 சதவீத கோடீஸ்வரர்கள் வசம் - பகீர் தகவல்

Asianet News Tamil  
Published : Jan 16, 2017, 06:04 PM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
இந்தியாவின் 58 % சொத்துக்கள் 1 சதவீத கோடீஸ்வரர்கள் வசம் - பகீர் தகவல்

சுருக்கம்

இந்தியாவின் ஒட்டுமொத்த சொத்துக்களில் 58 சதவீதத்தை, ஒரு சதவீதமே இருக்கும் பெருங்கோடீஸ்வர்கள் வசம் இருக்கிறது. இது உலக சராசரியைக் காட்டிலும் 50 சதவீதம் அதிகம் என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது. 

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில், சர்வதேச பொருளாதார மன்றம்(டபிள்யு.இ.எப்.) ஆண்டு மாநாடு நடந்தது. அதில், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ‘ஆக்ஸ்பாம்’ எனும் அமைப்பு உலகில் ஏழை, பணக்காரர்கள் குறித்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. உலகின் 99 சதவீத பொருளாதாரம் என்ற தலைப்பில் அறிக்கை இடம் பெற்றது. 

அது குறித்த விவரம் வருமாறு-

இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த சொத்துக்களில் 58 சதவீதத்தை அந்நாட்டில் உள்ள ஒரு சதவீத பெருங்கோடீஸ்வர்கள் வசம் இருக்கிறது.இந்த 57 கோடீஸ்வரர்களின் சொத்துமதிப்பு நாட்டில் உள்ள 70 சதவீத மக்களின் சொத்துக்களின் மதிப்புக்கு சமமாக இருக்கிறது. அதாவது 21 ஆயிரத்து 600 கோடி டாலர்கள்(ரூ.14.70 லட்சம் கோடி)

இதேபோல சர்வதேச அளவில் 8 பெருங்கோடீஸ்வரர்கள் உலகின் 50 சதவீத ஏழைமக்களின் சொத்துக்களின் மதிப்பை கொண்டு இருக்கிறார்கள். 

இந்தியாவில் மொத்தம் 84 பெருங்கோடீஸ்வரர்கள் உள்ளனர். அவர்களின் சொத்துமதிப்பு 24800 கோடி டாலர்கள்(ரூ.16.88 லட்சம் கோடி) எனத் தெரிவித்துள்ளது. இதில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் முகேஷ் அம்பானி ரூ.1.31 லட்சம் கோடியும்(1930 கோடி டாலர்), சன்பார்மா நிறுவனர்திலிப் சாங்வியிடம் ரூ.1.13 லட்சம் கோடி(1670 கோடிடாலர்), விப்ரோ நிறுவனம் அசிம் பிரேம்ஜியிடம் ரூ. ஒரு லட்சம் கோடி(1500 கோடி டாலர்), எச்.சி.எல். நிறுவனர் சிவ் நாடாரிடம் ரூ.74 ஆயிரம் கோடி(1,100 கோடி டாலர்) சொத்துக்களும் உள்ளன. அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு என்பது 3.1 லட்சம் கோடி டாலராக இருக்கிறது. 

உலக அளவிலான சொத்து மதிப்பு 255.7 லட்சம் கோடி டாலர். இதில், 6.5 லட்சம் கோடி டாலர் அளவிலான சொத்துக்கள் உலகப் பெருங் கோடீஸ்வர்கள் வசம் இருக்கிறது. இதில் முதலாவது இடத்தில் பில்கேட்ஸ்(7500 கோடி டாலர்), அமானிசியோ ஒர்டிகா( 6700 கோடி டாலர்), வாரன் பபட்(6080 கோடி டாலர்) சொத்துக்களுடன் உள்ளனர். 

அடுத்த 20 ஆண்டுகளில் உலகில் உள்ள 500 பேரிடம் இருக்கும் சொத்துமதிப்பு 2.1 லட்சம் கோடி டாலராக அதிகரிக்கும். இது இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என அந்த அமைப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

அதேசமயம், ஏழைமக்களில் 10 சதவீதத்தினரின் வருவாய் 15 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. ஆசியா முழுவதும், ஆண்-பெண் தொழிலாளர்களுக்கு இடையே ஊதிய வேறுபாடு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதாவது ஆண்கள்-பெண்கள் இடையே ஊதிய வேறுபாடு 90-70 என்ற விகிதத்தில் இருக்கிறது.

அதிலும் குறிப்பாக இந்தியாவில் ஆண்-பெண் ஊதிய வேறுபாடு மிக அதிக அளவில், மோசமான நிலையை நோக்கி செல்கிறது. ஆண், பெண் இடையே ஊதிய வேறுபாடு என்பது 30 சதவீத வேறுபாட்டில் இருக்கிறது. 

குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்களில் 60 சதவீதம் பேர் குறைவான ஊதியமே பெறுகின்றனர். 15 சதவீதம் பேர் மட்டுமே உயர்வான ஊதியம் பெறுகின்றனர் 

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பங்களாதேஷில் மீண்டும் ஒரு இந்து சுட்டுக்கொலை! 3 வாரத்தில் 5-வது பலி!
வாயில்லா ஜீவனை இப்படியா பண்றது? நாயை மது குடிக்க வைத்து வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது!