இந்தியா வந்தடைந்தது ‘ஸ்புட்னிக் - வி’ தடுப்பூசி... முதன் முதலில் பயன்படுத்தப்போவது எந்த மாநிலம் தெரியுமா?

By Kanimozhi PannerselvamFirst Published May 1, 2021, 5:19 PM IST
Highlights

இந்நிலையில் ரஷ்யாவில் இருந்து முதற்கட்டமாக 1.50 லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்துகள் ஐதராபாத் வந்தடைந்துள்ளன.

இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில், அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. ஆனால் தடுப்பூசி தட்டுபாடு காரணமாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படவில்லை. 

ஏற்கனவே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிட்ஷூல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. மக்களும் முன்பை விட தற்போது தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டுவதால் தடுப்பூசி மருந்திற்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. எனவே இந்தியாவிற்கு 3வது தடுப்பூசி தேவை என்பதால் ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்தான ஸ்புட்னிக் - வி தடுப்பூசிக்கு இந்தியா அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஸ்புட்னிக் - வி தடுப்பூசியை பயன்படுத்துவதன் மூலம் 90 சதவீதம் பயன்பெற முடியும் என ரஷ்ய நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

ரஷ்ய தடுப்பு மருந்திற்கு கடந்த ஏப்ரல் 12ம் தேதி மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் வழங்கிய நிலையில், மே 1ம் தேதி தடுப்பூசி மருந்துகள் இந்தியா வந்தடையும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியம் இந்தியாவுக்கு ஆண்டுதோறும் 850 மில்லியன் டோஸ் ஸ்புட்னிக் தடுப்பு மருந்தை அனுப்ப ஏற்கனவே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 5 நிறுவனங்கள் இந்த மருந்தைப் பெற்று இந்தியா முழுவதும் விநியோகிக்கவுள்ளன. இந்நிலையில் ரஷ்யாவில் இருந்து முதற்கட்டமாக 1.50 லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்துகள் ஐதராபாத் வந்தடைந்துள்ளன. இந்த தடுப்பூசிகள் அனைத்தும் தெலங்கானா மாநிலத்திற்கு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!