
இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஜம்மு காஷ்மீரில் பல்வேறு மாவட்டங்களில் வியாழக்கிழமை இரவு நிலைமை உச்சக்கட்டத்தை எட்டியது. போர் சூழலை ஒத்த சூழ்நிலைகள் நிலவுகின்றன. ஜம்மு விமான நிலையம் அருகே வெடிச்சத்தம் கேட்டதால் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜம்மு, சாம்பா, கதுவா, ராஜோரி, பூஞ்ச் மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களையும் மே 9 ஆம் தேதி மூட வேண்டும் என்று கோட்ட ஆணையர் உத்தரவிட்டுள்ளார். “தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஜம்மு கோட்டத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மே 9 ஆம் தேதி மூடப்படும்” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வியாழக்கிழமை இரவு ஜம்மு விமான நிலையம் அருகே பெரிய சத்தம் கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். விமானப்படை தளத்திற்கு அருகில் RAF பணியாளர்கள் உஷார் நிலையில் உள்ளனர். பாகிஸ்தானில் இருந்து அடுத்தடுத்து ட்ரோன் மற்றும் ஏவுகனைகள் இந்தியாவை நோக்கி வந்தது. இதனை வானிலேயே வான் பாதுகாப்பு அமைப்பு வீழ்த்தியது.
சிந்துர் நடவடிக்கை தொடரும் நிலையில், இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள பல விமானப்படை தளங்களை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. லாகூர், ரஹீம் யார் கான், சியால்கோட் பகுதிகளில் பாகிஸ்தான் விமானப்படைக்குச் சொந்தமான சில F-16 போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
எல்லையில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்திய பாதுகாப்புப் படைகள் முழு விழிப்புடன் இருக்கும் நிலையில், இரவில் எல்லையில் மீண்டும் கடும் துப்பாக்கிச் சூடு நடத்தப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டதால், பதற்றமான சூழ்நிலை மேலும் தீவிரமடைந்துள்ளது. எல்லையோர மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்திய ராணுவமும் பாகிஸ்தானின் பல்வேறு இடங்கள் மீது தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.