
பொதுத்துறை வங்கிகளில் 9000 கோடி ரூபாய்க்கு மேல் கடனை பெற்றுக்கொண்ட திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டன் சென்ற விஜய் மல்லையா விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாரத ஸ்டேட் வங்கி உள்பட பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு மோசடி செய்த பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அவரை வழக்கு விசாரணைக்காக நாடு கடத்தும்படி இந்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு கோரிக்கை வைத்தது. ஆனால் அதை இங்கிலாந்து ஏற்க மறுத்துவிட்டது.
இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் தெரசா மே, மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார், திங்கள்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியா - பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ள இரு நாடுகளைச் சேர்ந்த குற்றவாளிகளை அவர்களின் சொந்த நாட்டு அரசிடம் ஒப்படைப்பது தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விவகாரத்தில் விரைவில் தீர்வு காணவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் இங்கிலாந்தின் அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்திடம் இருந்து முக்கிய பிரமுகர்களுக்கு ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு நடத்தப்பட்ட ஒப்பந்தத்தில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேலும் இடம் பெற்று இருக்கிறார். இதேபோல் இங்கிலாந்தும் 17 பேர் கொண்ட பட்டியலை இந்தியாவிடம் அளித்துள்ளது.
இதுகுறித்து, வெளியுறவுத் துறை அமைச்கத்தின் ஐரோப்பிய விவகாரங்களுக்கான செயலர் ரண்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில்,
’வர்த்தம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக இந்தியா - பிரிட்டன் நாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். எனினும், இந்தப் பேச்சுவார்த்தையில், இரு நாடுகளிலும் தஞ்சமடைந்திருக்கும் குற்றவாளிகளை வெளியேற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதே முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
குறிப்பாக, பிரிட்டனில் தலைமறைவாகியிருக்கும் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து மோடியும், தெரசா மேவும் நீண்டநேரம் ஆலோசித்தனர். அப்போது, இரு நாடுகளிலும் தஞ்சமடைந்திருக்கும் குற்றவாளிகளை அந்தந்த நாட்டு அரசுகளிடம் ஒப்படைப்பது தொடர்பான ‘பரஸ்பர சட்டப்பூர்வ ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை’ முழுவீச்சில் செயல்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது’ என்றார்.