வருமானவரியில் ரூ.100 அல்லது அதற்கும் குறைவான வரி பாக்கி இருந்தால், அவர்களிடம் இருந்து வரியை வசூலிக்காமல் விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஏறக்குறைய 21.54 லட்சம் பயன் பெற உள்ளனர்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பூர்வமாக நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ்குமார் கெங்வார் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
வருமானவரி செலுத்துவோரில் ரூ.100 அல்லது அதற்கு குறைவான வரி பாக்கி வைத்து இருப்பவர்களிடம் இருந்து வரியை வசூல் செய்வதற்கு அரசுக்கு அதிகமான செலவுகள் ஏற்படுகிறது.
அதை பராமரிப்பதிலும் கடும் சிரமம் ஏற்படுகிறது. ஆதலால், ரூ.100 அல்லது அதற்கு குறைவாக வரி பாக்கி இருக்கும் 21.54 லட்சம் பேரிடம் நிலுவை தொகையை வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
இந்த விலக்கின் மூலம் அரசுக்கு ரூ.6.4 கோடி அளவுதான் இழப்பு ஏற்படும், இதனால் அரசின் வருவாயில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படப்போவதில் என்பதை ஆலோசித்தே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதன் மூலம் 21.54 லட்சம் பேரின் கணக்குகளை பராமரிக்க ஆகும் செலவு குறையும், மனிதவளத்தை அடுத்த பணிக்கு திருப்ப முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.