
நவம்பர் மாதம் நடக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான மசோதாவும், அரசுப்பதவி உயர்வுகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவும் கொண்டு வரப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா மரியாதை நிமித்தமாக குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்தை நேற்றுமுன்தினம் சந்தித்து பேசினார். அதன்பின், பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சந்திப்புக்கு பின், முதல்வர் சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறியதாவது-
கர்நாடகத்தில் லிங்காயத் சமூகத்தினர் தனியாக ஒரு மதம் தேவை, உருவாக்க வேண்டும் என்று கோருகிறார்கள். அது குறித்து மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்படும். இதில் எனக்கு எந்தவிதத்திலும் பங்கு இல்லை.
நவம்பர் மாதம் நடக்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான மசோதாவும், அரசு பதவிகளில் பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவும் கொண்டுவரப்படும். மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் மசோதா நிச்சயம் நிறைவேற்றப்படும்.
இது தொடர்பாக மஹாராஷ்டிராவில் நடைமுறைக்கும் இருக்கும் சட்டம் குறித்து ஆய்வு செய்யவும் அதிகாரிளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு ஊழியர்கலுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. இது குறித்து அதிகமாக பேசவிரும்பவில்லை. ஆனால், அடுத்த கூட்டத்தொடரில் இந்த மசோதாவை நாங்கள் நிறைவேற்றுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எழுத்தாளரும், சிந்தனையாளருமான கல்புர்க்கி கொல்லப்பட்டதற்கு பின், மூடநம்பிக்ைககளுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்றும் நெருக்கடி கர்நாடக அரசுக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக சட்ட அமைச்சர் டி.பி. ஜெயச்சந்திராவுக்கு கடுமையாக நெருக்கடி மக்கள் நலக்குழுக்கள் மூலம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.