
துர்கா பூஜையின்போது அமைதியாக இருக்க வேண்டும் என்றும், வன்முறையில் ஈடுபட்டு நெருப்புடன் (மாநில அரசுடன்) விளையாடக் கூடாது என்றும் மேற்கு வங்காள முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
300 இடங்களில்…
நாடு முழுவதும் வரும் 26-ந்தேதி துர்கா பூஜை தொடங்கி, 30-ந்தேதி வரை நடைபெறுகிறது. குறிப்பாக மேற்கு வங்காளத்தில் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது. மாநில அரசியலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே பல முறை மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, வரும் 30-ந்தேதி விஜய தசமி நிகழ்ச்சியும் வருகிறது. இதையொட்டி, மேற்கு வங்காளத்தில் 300 இடங்களில் ஆயுத பூஜையை நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு திட்டமிட்டுள்ளது.
சட்டம் ஓழுங்கு
இதனால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, முகரம் பண்டிகை அடுத்த மாதம் 1-ந்தேதி வருவதையொட்டி, முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். இதன்படி, இம்மாதம் 30-ந்தேதியன்று மாலை 6 மணி முதல் மறுநாள் அக்.1-ந் தேதி மாலை வரை, துர்கா சிலைகளை வைத்து பேரணி நடத்துவதற்கு தடை விதித்தார். இதற்கு ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
நீதிமன்ற உத்தரவு
இது தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் கடந்த வெள்ளியன்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், இம்மாதம் 30-ந்தேதி இரவு 10 மணி வரைக்கும் துர்கா சிலை பேரணி நடத்தலாம் என்றும், ஆனால் முகரம் அன்று பேரணி நடத்தக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. மறுநாள் அதாவது அக்டோபர் 2-ந்தேதி முதல் பேரணி நடத்தலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று கூறியதாவது- துர்கா பூஜையின்போது பாஜக, ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. உள்ளிட்ட அமைப்புகள் அமைதியை சீர் குலைக்க கூடாது. வன்முறையில் ஈடுபட்டு ‘நெருப்புடன் அவர்கள் விளையாடக் கூடாது’ என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.