
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டமான ‘ஸ்வாச்ஹதா ஹி சேவா’ இயக்கத்தில் பங்கேற்று கோடிக்கணக்கான மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டக்கோரி, மலையாள நடிகர் மோகன்லாலுக்கு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்துள்ளார்.
நடிகர் மோகன்லால் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்தால், லட்சக்கணக்கான மக்களை இணைக்க உதவியாக இருக்கும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி நாட்டை தூய்மையாக வைத்திருக்கும் ஸ்வாச் பாரத் எனும் தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தி தீவிரமாக மக்களிடம் பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 15-ந்தேதி உத்தரப்பிரதேசம் சென்று இருந்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒருபகுதியாக அடுத்த 2 வாரங்களுக்கு சுத்தப்படுத்தும் ஸ்வாச்தா ஹி சேவா பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.
அதன்படி, மலையாள நடிகர் மோகன்லாலுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி, ஸ்வாச்பாரத் திட்டத்தில் பங்கற்கும் படி அழைப்பு விடுத்துள்ளார். இந்த கடிதத்தை கேரள பா.ஜனதா கட்சி நேற்று வௌியிட்டது.
இந்த கடிதத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளதாவது-
சினிமா மிகவும் சக்திவாய்ந்த ஊடகம், மிகப்பெரிய அளவில் மாற்றத்தை கொண்டுவரக்கூடியது. நாட்டை சுத்தமாக வைத்து இருப்பது என்பது மிகப்பெரிய சேவை. இந்த சேவையை நாம் ஏழைகளுக்காக, அடித்தட்டு மக்களுக்காக, வழிம்புநிலை மக்களுக்காக செய்ய வேண்டும்.
அனைவராலும் மிகவும் விருப்பப்படும் நடிகரான, ஆளுமை கொண்ட உங்களுக்கு மக்களை எளிதாக ஈர்த்து தாக்கத்தை ஏற்படுத்த முடியும். மத்தியஅரசின் ‘ஸ்வாச்தா ஹி சேவா’ இயக்கத்துக்கு ஆதரவு தாருங்கள் என்று தனிப்பட்ட முறையில் உங்களை வரவேற்கிறேன். ஸ்வாச் பாரத் திட்டத்துக்காக சில மணி நேரங்களை செலவு செய்யுங்கள். உங்களின் பங்களிப்பு லட்சக்கணக்கான மக்கள் இந்த பணியில் ஈடுபட தொடக்கமாக அமையும்.
இந்த இயக்கத்தில் பங்கேற்று நடிகர் மோகன்லால் தனது அனுபவத்தை பிரதமர் நரேந்திரமோடி செயலியில் பகிர்ந்து கொள்வார் என நம்புகிறோம். தேசப்பிதா காந்தியின் தத்துவங்களாலும், கனவாலும் ஈர்க்கப்பட்டு, 125 கோடி மக்களின் நம்பிக்கை ஆகியவற்றைப் பெற்று நாட்டை சுத்தத்தை நோக்கி நகர்த்துவோம் என உறுதிஏற்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.