மருத்துவர்களை பாதுகாக்க முடியாவிட்டால், அனைத்து மருத்துவமனைகளையும் மூடுங்கள்: அரசை சாடிய கேரள உயர்நீதிமன்றம்

Published : May 10, 2023, 04:48 PM ISTUpdated : May 10, 2023, 04:55 PM IST
மருத்துவர்களை பாதுகாக்க முடியாவிட்டால், அனைத்து மருத்துவமனைகளையும் மூடுங்கள்: அரசை சாடிய கேரள உயர்நீதிமன்றம்

சுருக்கம்

அரசு மருத்துவமனையில் கொடூரமாக குத்தப்பட்டு, 23 வயது பயிற்சி மருத்துவரின் கொலையை தடுக்க தவறிய கேரள அரசு மற்றும் காவல்துறையை உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியது. 

கேரள மாநிலம் கொட்டாரக்காரா தாலுகா மருத்துவமனையில் 23 வயதான பயிற்சி மருத்துவர், சந்தீப் என்ற பள்ளி ஆசிரியரால் பலமுறை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டர். தனது குடும்ப உறுப்பினர்களுடன் ஏற்பட்ட சண்டையில் காயம் அடைந்ததால் சந்தீப்பை காவல்துறையினர் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அந்த நபரின் காலில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவர் சிகிச்சை அளித்த போது, திடீரென ஆத்திரமடைந்த அவர், அங்கு நின்றிருந்த அனைவரையும் கத்திரிக்கோல் மற்றும் கத்தி மூலம் தாக்கினார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு அவசர வழக்காக இன்று கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அரசு மருத்துவமனையில் கொடூரமாக குத்தப்பட்டு, 23 வயது பயிற்சி மருத்துவரின் கொலையை தடுக்க தவறிய கேரள அரசு மற்றும் காவல்துறையை கடுமையாக சாடினர்.

மருத்துவர்களைப் பாதுகாக்க முடியாவிட்டால், அனைத்து மருத்துவமனைகளையும் மூடுங்கள்" என்று நீதிபதி தேவன் ராமச்சந்திரன் மற்றும் நீதிபதி கௌசர் எடப்பாடி அடங்கிய அமர்வு கேரள அரசை கடுமையாக சாடியது.  அதே நேரத்தில் இளம் பெண் மருத்துவரைப் பாதுகாக்கும் கடமையில் தவறிய காவல்துறையையும் நீதிபதிகள் சாடினர். இதுகுறித்து பேசிய நீதிபதிகள் "நீங்கள் இந்த பெண்ணை காப்பாற்ற தவறிவீட்டீர்கள். இது உங்கள் காவலில் இருந்து ஒரு மனிதனை அழைத்து வந்த வழக்கு. காவல்துறை தொடர்ந்து விழிப்புடன் இருந்திருக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க : பெரம்பலூரில் தொழிலதிபரின் வீட்டை உடைத்து பணம், நகை கொள்ளை - காவல் துறை விசாரணை

மேலும் "அவர் அசாதாரணமான நடத்தையை வெளிப்படுத்திய தருணத்தில், காவல்துறை தலையிட்டிருக்க வேண்டும். அவர் கட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். காவல்துறை என்பது எதிர்பாராததை புரிந்துகொள்வதும் எதிர்பார்ப்பதும் ஆகும். இல்லையெனில் நீங்கள் எங்களுக்குத் தேவையில்லை. அது வேண்டுமா? சட்டத்தை மீறாமல் இருப்பதை உறுதி செய்வது உங்கள் முதல் மற்றும் முக்கிய பொறுப்பாக இருக்க வேண்டாமா?"

குற்றம் சாட்டப்பட்டவர்களை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்துவதற்கான நெறிமுறை என்ன? இரவிலும் கூட நூற்றுக்கணக்கான குற்றவாளிகள் மாஜிஸ்திரேட்டுகள் முன் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். மருத்துவர்கள் முன் ஆஜர்படுத்தும்போது இதுபோன்ற நெறிமுறைகள் ஏன் பின்பற்றப்படவில்லை? மருத்துவர்கள் முக்கியமில்லை என்று சொல்கிறீர்களா? அதனால்தான் மற்ற நிகழ்வில் பின்பற்றப்படும் நெறிமுறைகளை நாங்கள் கேட்கிறோம், மேலும் மருத்துவர்களைப் பொறுத்தமட்டில் இதையே பின்பற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்." என்று தெரிவித்தனர்.

இது குறித்து நீதிபதி ராமச்சந்திரன் கூறுகையில், "இந்த மாதிரியான நோயாளியை மருத்துவரிடம் தனியாக விட்டுச் செல்வது பேரழிவுக்கான செய்முறையாகும். பெண் மருத்துவர் முன் அழைத்து வரும்போது போலீசார் வெளியே நிற்பதாக கூறுவது பேரழிவுக்கான செய்முறையாகும்" என்றார்.

தொடர்ந்து “ பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த நீதிமன்றம், "பெற்றோர்களின் நிலையை கற்பனை செய்து பாருங்கள். அவர்கள் தங்கள் மகளை வேலைக்கு அனுப்பாமல் சேவை செய்ய மருத்துவமனைக்கு அனுப்புகிறார்கள்.. ஆனால் அவள் மீண்டும் சவப்பெட்டியில் கொண்டு வரப்படுகிறாள். இன்று நடந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இதற்கு முன் வேறு எந்த நாட்டிலும் இது நடந்திருக்கிறதா அல்லது இதிலும் நாம் தான் முதலில் வந்திருக்கிறோமா? என்று கேள்வி எழுப்பினர்.

மேலும் “ மருத்துவரின் அறைகள் / சம்பவம் நடந்த இடங்களின் சிசிடிவி காட்சிகள் பாதுகாக்கப்படும் என்றும், இல்லையெனில் கண்டறியப்பட்டால் மருத்துவமனை கண்காணிப்பாளர் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த கொலை குறித்து நாளை காலைக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாநில காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க : மாமியாரை வாணலியை வைத்து அடித்து கொன்ற மருமகள்.. பதற வைக்கும் கொலை சம்பவம்..

PREV
click me!

Recommended Stories

கணவனை கழற்றிவிட்டு ஏசி மெக்கானிக்கவுடன் சென்ற 25 வயது பெண்.. 8 மாதத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கைகாட்டுபவரே முதல்வர்..! ராகுல் காந்தியின் மாஸ்டர் ப்ளான்..! கதிகலங்கும் கதர் சட்டைகள்..!