‘காந்தி’ என்ற குடும்ப பெயரால்தான் 2 முறை எம்.பி. ஆக முடிந்தது - பா.ஜ.க. தலைவர் வருண் காந்தி பேச்சு 

First Published Dec 17, 2017, 9:54 PM IST
Highlights
I had 2 times MP because I had a family name Gandhi. The son of Union Minister Maneka Gandhi and the BJP. MP Varun Gandhi said.


என்னுடைய பெயருடன் காந்தி என்ற குடும்பப்பெயர் இருந்ததால்தான் என்னால் 2 முறை எம்.பி. ஆக முடிந்துள்ளது என மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகனும் பா.ஜ.க. எம்.பி.யுமான வருண் காந்தி தெரிவித்துள்ளார்.

தனது தந்தை மற்றும் பாட்டியின் செல்வாக்கு இல்லாமல் தான் இளவயதில் எம்.பி. ஆகியிருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் வருண் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது-

நீங்கள் எல்லாம் எனது பேச்சைக் கேட்க வந்துள்ளீர்கள். எனது பெயரின் பின்னால் காந்தி என்ற குடும்பப்பெயர் இல்லாதிருந்திருந்தால் நான் எம்.பி.யாக ஆகியிருக்கவும் முடியாது. நீங்கள் எல்லாம் எனது பேச்சைக் கேட்க வந்தும் இருக்கமாட்டீர்கள்.

தந்தையோ, தாத்தாவோ பாட்டியோ புகழ் வாய்ந்தவர்களாக இல்லாமல், சாதாரண அடித்தளத்தில் உள்ள இளைஞர்கள் மிகவும் திறமை உள்ளவர்களாக இருப்பினும் அரசியலில் மேலே வர இயலாது.

ஒரு சதவீதம் பேரின் ஆதிக்கம்

குறைந்தபட்ச பணமான ரூ. 25,000 கடனைத் திருப்பிச் செலுத்த இயலாததால் கடந்த 15 வருடங்களில் 14 லட்சம் பேர் சிறைக்கு செல்ல வேண்டியதாயிற்று. ஆனால் வசதி படைத்த பணக்காரர்கள் தங்களது மகளின் திருமணத்திற்காக ஆடம்பரமாக பணத்தை வாரி இறைக்கின்றனர்.

நாட்டின் 60 சதவீத சொத்து வெறும் ஒரு சதவீதத்தினரால் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் இன்னும் ஏற்றத்தாழ்வு மிக அதிகமாக உள்ளது.

இவ்வாறு வருண் காந்தி தெரிவித்தார்.

மக்களின் குரலுக்கு செவிகொடுத்து கேட்கும் வகையில் நாடாளுமன்றத்தின் அமைப்பு முறையில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இங்கிலாந்தில் 60 ஆயிரம் பேர் கையெழுத்திட்டு ஒரு பிரச்சினையை எழுப்பினாலே அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுகிறது என்றும் வருண் காந்தி சுட்டிக்காட்டினார்.

அந்த கருத்தரங்கில், இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜுவும் கலந்துகொண்டு உரையாற்றினார்.

click me!