மரத்தைக் கட்டிப் பிடிக்க ரூ.1500 கட்டணமா? பெங்களூரு நிறுவனத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

By SG BalanFirst Published Apr 18, 2024, 5:16 PM IST
Highlights

பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனம் ரூ.1,500 கட்டணத்தில் மரங்களைக் கட்டிப்பிடித்து வனக்குளியல் செய்யலாம் என்று விளம்பரம் செய்திருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இயற்கையுடன் இணைந்திருப்பது நவீன வாழ்க்கையின் அழுத்தங்களுக்கு ஒரு சக்திவாய்ந்த தீர்வாக இருக்கும். இயற்கையான சூழலில் நேரத்தை செலவிடுவது கவலை மற்றும் மனச்சோர்வைக் குறைக்கும் என்று ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஆனால், பல நகரவாசிகளுக்கு இயற்கையுடன் நேரத்தைச் செலவிடுவதற்கு அமைதியான சூழலைக் கண்டறிவது சவாலாக உள்ளது. பூங்காக்கள் மற்றும் தோட்டங்களுக்குச் செல்லும் வாய்ப்பு இருந்தாலும், ஒரு ஆழ்ந்த புதிய அனுபவத்தைப் பெற அது போதுமானதாக இல்லை என்று நினைக்கிறார்கள்.

இதனால்தான் ஷின்ரின் யோகு என்ற ஜப்பானிய வனக் குளியல் முறை வரவேற்பைப் பெறுகிறது. வனக் குளியல் என்பது காடுகளின் வழியாக மெதுவாக நடக்கும் அனுபவத்தைக் வழங்குகிறது. இது மன அழுத்தத்தை குறைக்கிறது என்றும் அதன் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

Babe, wake up! There's a new scam in the market. pic.twitter.com/UO4zrJgiUa

— jolad rotti (@AJayAWhy)

இந்த வனக்குளியல் எந்தச் செலவும் பிடிக்காத செயல்தான். ஆனால், இந்தியாவில் இதையும் காசாக்க முயற்சி செய்வது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனம் ரூ.1,500 கட்டணத்தில் மரங்களைக் கட்டிப்பிடித்து வனக்குளியல் செய்யலாம் என்று விளம்பரம் செய்திருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இந்த விளம்பரத்தைப் பகிர்ந்துள்ள நெட்டிசன் ஒருவர், "விழிப்புடன் இருங்கள். ஒரு புதிய மோசடி வந்திருக்கிறது" என்று எச்சரித்துள்ளார். அவரது பதிவில் பல நெட்டிசன்கள் பதில் அளித்துள்ளனர்.

"நீங்கள் மரங்களை கட்டிப்பிடிப்பதன் மூலமும், அவற்றின் நிழலில் நேரத்தை செலவிடுவதன் மூலமும் இயற்கையுடன் இணைந்திருக்கிறீர்கள். அதெல்லாம் நல்லது, ஆனால் பொது இடத்தில் இதைச் செய்வதற்கு ரூ.1,500 கட்டணமா?" என ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.

"பூங்காவிற்குச் செல்வது, சுற்றிலும் குப்பை போடாமல் இருப்பது மற்றும் குப்பைகளை சரியாக குப்பைத்தொட்டியில் போடுவது இதைச் செய்தாலே போதும்" என்று மற்றொரு பயனர் கருத்து கூறியுள்ளார்.

click me!