ஆசியாவிலேயே முதன்முறையாக கொச்சியில் கைகள் மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுவும் பெண்ணிற்கு இளைஞர் ஒருவரின் கைகள் பொருத்தப்பட்டுள்ளது.
புனேவிலிருந்து மங்களூருவுக்கு சென்ற ஸ்ரேயா என்ற கல்லூரி மாணவி, பேருந்து விபத்துக்குள்ளானதில் தனது இரு கைகளையும் இழந்தார். கைகளை இழந்த தொடக்க கட்டத்தில் சிரமப்பட்டாலும் நாளடைவில் கைகள் இல்லாமல் வாழக் கற்றுக்கொண்டுவிட்டார்.
இந்நிலையில், கொச்சியில் சாலை விபத்தில் சிக்கிய சச்சின் என்ற இளைஞர் மூளைச்சாவு அடைந்தார். சச்சினின் உடலுறுப்புகளை அவரது பெற்றோர் தானமாக வழங்கினர். இதையடுத்து சச்சினின் கைகளை ஸ்ரேயாவுக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டு, கொச்சி அமிர்தானந்தமயி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இருபது டாக்டர்கள், 16 மயக்க மருந்து நிபுணர்கள் அடங்கியக் குழு 13 மணி நேரம் அறுவைசிகிச்சை மேற்கொண்டு, சச்சினின் கரங்களை ஸ்ரேயாவுக்குப் பொருத்தினர். இழந்த கைகள் மீண்டும் கிடைத்தவுடன் ஸ்ரேயா மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்.
ஆசியாவிலேயே முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட கைகள் மாற்று அறுவை சிகிச்சை இதுதான். அதுவும் ஆண் ஒருவரின் கைகள் பெண்ணுக்கு பொருத்தப்பட்டுள்ளது.
ஸ்ரேயா மட்டுமல்லாது அவரது பெற்றோரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.