
புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய புதுவை முதலமைச்சர் நாராயணசாமி, 500 மற்றும் 1000ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அரசு அறிவித்து மக்களை அலைக்கழிப்பதாகவும், மத்திய பாஜக அரசை கண்டித்து வருகின்ற 28-ஆம் தேதி புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், வட்டார காங்கிரஸ் சார்பாக மத்திய அரசு அலுவலகங்களிலும், வங்கிகளின் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரி மாநிலத்தில் அரசு ஊழியர்களின் சம்பளத்தை இம்மாதம் வங்கிகளில் செலுத்தாமல் ரொக்கமாக வழங்கவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து நாளை வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் நாராயணசாமி தெரிவித்தார்.
இதேபோல், சத்தீஷ்கர் மாநில அரசின் உயரதிகாரிகள் கூட்டம் ராய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் சம்பள பணத்தை எடுப்பதில் அரசு ஊழியர்களுக்கு நிலவும் சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர், குரூப் 3 மற்றும் குரூப் 4 நிலையில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத் தொகையில் ரூ.10 ஆயிரத்தை ரொக்கமாக வழங்க நிதித் துறைக்கு அம்மாநில முதல்வர் ரமண் சிங் உத்தரவிட்டார்.