
ஓகி புயல் கோரத்தாண்டவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தனது ஒரு மாத சம்பளத்தை கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, அம்மாநில ஆளுநர் சதாசிவம் வழங்கியுள்ளார்.
ஓகி புயல், கடந்த வாரம் கோரத்தாண்டவம் ஆடியது. ஓகியால், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. புயலின்போது மீன்பிடிக்கச் சென்றவர்கள், இன்னும் கரை திரும்பவில்லை. ஓகி புயல் குறித்த முறையான முன்னறிவிப்பு இல்லாததால், அவர்கள் கடலுக்கு
சென்று மாயமாகினர். ஓகி புயலால் தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரளா கடுமையாக பாதிக்கப்பட்டது.
சரியான நேரத்தில் எச்சரிக்கை விடுக்காததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியிருந்தார். இதனால், பலத்த சேதம் ஏற்பட்டதாக கேரள முதலமைச்சர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், ஓகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதேபோல், ஓகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இந்த நிலையில், ஓகி புயல் பாதிக்கப்ட்ட மக்களுக்கு உதவ கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அம்மாநில ஆளுநர் சதாசிவம், நிதியுதவி அளித்துள்ளார். தன்னுடைய ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கினார். அதேபோல், ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் ஊழியர்களும் தங்களது ஒருநாள் ஊதியத்தை வழங்குவர் என்றும் ஆளுநர் சதாசிவம் தெரிவித்துள்ளார்.