
மும்பை விமான நிலையத்தில். ஜட்டியில் மறைத்து வைத்து தங்கம் கடத்திய தம்பதியரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். கடத்தப்பட்ட தங்கத்தையும் பறிமுதல் செய்தனர். கடத்தப்பட்ட தங்கத்தின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் மதிப்புடையதாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெளி நாட்டில் இருந்து நூதன முறையில் இந்தியாவுக்கு தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து நாம் நாளிதழ்களில் செய்திகள் படித்து வருகிறோம். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட மிக்சியில் மறைத்தும், தங்க குச்சிகளாக கொண்டும் தங்கம் கடத்தப்பட்டது. அதனை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து, கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தும், அவர்களை கைது செய்தும் நடவடிக்கை எடுத்தனர்.
அந்த வகையில் மும்பை விமான நிலையத்தில், நூதன முறையில், தங்கம் கடத்தி உள்ளனர். மும்பை விமான நிலையம் வந்த தம்பதியைப் பார்த்த விமான நிலைய போலீசார் சந்தேகம் அடைந்தனர். இதை அடுத்து, அவர்களை தனியாக அழைத்து சென்று சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சோதனையின்போது, பெண், ஜட்டியில் மறைத்து தங்கம் கடத்தி வந்துள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதன் பின்னர், அந்த தங்கத்தை அவர்கள் பறிமுதல் செய்தனர். ஜட்டியில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட தங்கத்தின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும் என்று போலீசார் மதிப்பிட்டுள்ளனர்.
கடத்தப்பட்ட தங்கம் குறித்து தம்பதியரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், சென்னையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர், தனது வீட்டை விற்று, அந்த பணத்தில் வெளி நாடுகளுக்குச் சென்று, குறைந்த விலையில் தங்கம் வாங்கி வந்து இந்தியாவில் விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. பாலசுப்பிரமணியனுக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர் என்றும், சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க அவர் தனது 2 மனைவிகளையும் மாறி மாறி தங்கம் கடத்த பயன்படுத்தி வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.