
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில், ஜவுளி உற்பத்தி தொழிற்சாலையில் இன்று அதிகாலை நிகழ்ந்த பயங்கர தீவிபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
காசியபாத் நகரில் ஏராளமான ஜவுளி உற்பத்தி தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இன்று அதிகாலை 5 மணிக்கு தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
முதலில் தீப்பற்றியதை யாரும் கவனிக்கவில்லை. இதனையடுத்து, தீ மளமளவென தொழிற்சாலை முழுவதும் பரவியது. இதில் பணியாற்றிக் கொண்டிருந்த 12 பேர் தப்பிக்க வழியில்லாமல் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
காயமடைந்த 15-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் 10 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஏராளமான பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.