எங்கள் தளங்கள் வழியாக தேர்தல் தொடர்பான தவறான தகவல்கள் பரவ அனுமதிக்க மாட்டோம் என தேர்தல் கமிஷனிடம், சமூக வலைத்தளங்கள் வாக்குறுதி அளித்துள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தெரிவித்துள்ளார்.
எங்கள் தளங்கள் வழியாக தேர்தல் தொடர்பான தவறான தகவல்கள் பரவ அனுமதிக்க மாட்டோம் என தேர்தல் கமிஷனிடம், சமூக வலைத்தளங்கள் வாக்குறுதி அளித்துள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன்னதாக ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தல்களில் சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதுகுறித்து, தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி. தேர்தல் கமிஷனின் மூத்த துணை தேர்தல் கமிஷனர் உமேஷ் சின்கா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதித்துவ சட்ட திருத்தம் தொடர்பான குழுவினர், கூகுள், பேஸ்புக், டுவிட்டர் ஆகியவற்றின் உள்நாட்டு தலைமை அதிகாரிகள் கூட்டத்தை கூட்டிப்பேசினார்கள்.
அவர்களிடம், தூய்மையான தேர்தலை உறுதி செய்வதற்கு ஏற்ற விதத்தில், போலி செய்திகளால் தாக்கம் ஏற்படுவதை தவிர்க்கவும், வாக்காளர்களை குறிவைத்து தகவல்கள் பரப்புவதை தடுக்கவும் உங்களால் என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் தேர்தல் தூய்மையாக நடைபெறுவதற்கு, தங்கள் தளங்கள் வழியாக தவறான தகவல்கள் பரவ அனுமதிக்க மாட்டோம் என உறுதியளித்தனர். தேர்தலுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக தேர்தல் தொடர்பான எதையும் தங்கள் தளங்களில் அனுமதிக்க மாட்டோம் எனவும் அவர்கள் கூறினர்.
இது கர்நாடக சட்டசபை தேர்தலின்போது சோதித்துப் பார்க்கப்பட்டது. அடுத்து நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக 4 மாநில சட்டசபை தேர்தலில் சோதித்துப் பார்க்கப்படும். சமூக வலைத்தளங்கள் தேர்தல் நேரத்தில் தங்கள் தளங்களில் அரசியல்கட்சிகள் வெளியிடும் விளம்பரங்கள் பற்றிய தகவல்களை அவற்றின் கட்டண விவரத்துடன் தெரிவிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். இது வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கிட உதவும். இவ்வாறு அவர் கூறினார்.