யாரும் எதிர்பார்க்கல… வரலாறு காணாத வெள்ளம்… யாரையும் இழக்க விரும்பல.. பத்திரமா இருங்க மக்களே … பினராயி விஜயன் உருக்கம் !!

By Selvanayagam PFirst Published Aug 16, 2018, 1:34 AM IST
Highlights

கேரள மாநிலத்தில் தென் மேற்குப் பருவமழை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில். கடந்த 50 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வெள்ளம் ஏற்பட்டுள்ளதால்  பொது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும் என்றும், யாரையும் தான் இழக்க விரும்பவில்லை என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உருக்கத்துடன் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த மே மாதம் இறுதியில் கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது. இரண்டு மாதங்களாக கேரளா முழுவதும் மழை வெளுத்து வாங்கியதால் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிந்தன. இதையடுத்து சற்று ஓய்ந்திருந்த மழை கடந்த 8-ம் தேதி தொடங்கி விடாமல் கனமழை பெய்து வருகிறது,

இதனால் கேரள மாநிலம் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இடர்பாடுகளில் சிக்கித் தவித்து வருகிறது. மாநிலமே உருகுலைந்து காணப்படுகிறது. அணைகள் நிரம்பி வழிவதால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரையில் பலியானவர்கள் எண்ணிக்கை 67ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. இந்நிலையில் தொடர்ந்து கனமழை மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து  12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கொச்சி விமான நிலையம் சனிக்கிழமை வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரளாவில் வரலாற்றில் இல்லாத வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர்  பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர்  பினராயி விஜயன், கேரளாவில் அணைகள் அனைத்தும் நிரம்பி, நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கட்டுக்கடங்காத வெள்ளத்தால், மக்களுக்கு நீரை சுத்திகரித்து வழங்கும் எந்திரங்கள், மோட்டார்கள் ஏராளமானவே பழுதடைந்து இருக்கின்றன.

வரலாற்றில் இதுவரையில்லாத வகையில் கேரளாவில் மழை பெய்து வருகிறது. இன்னும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, கேரளாவில் வசிக்கும் மக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.

மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்கு அரசு முன்னுரிமை கொடுக்கும்.

அண்டை மாநிலங்களும் ஏராளமான உதவிகளை செய்து வருகிறது. அவர்களுக்கு நன்றியை தெரிவிக்கிறோம். எங்களுக்கு மழை நின்று பின்பும் அதிகமான உதவி தேவைப்படும், அதை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என  பினராயி விஜயன் தெரிவித்தார்.

click me!