சபரிமலையில் தனி ஆளாய் அமர்ந்திருக்கும் தந்திரி !! வானம் பிளந்து கொட்டும் மழை !!

By Selvanayagam PFirst Published Aug 16, 2018, 12:49 AM IST
Highlights

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் பம்பை ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அய்யப்பன் கோவிலுக்கு வர பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு நடைபெற்ற நிறைபுத்தரிசி பூஜையில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளாததால் கொட்டும் கனமழையில் கோவிலின் தந்திரி சோகத்துடன் அமர்ந்துள்ளார்.

தென் மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே கேரளாவில் மழை கொட்டி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருவதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பல்லாயிரக்களக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. கிட்டததட்ட 8000 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 26 ஆண்டுகளுக்கு பிறகு, இடுக்கி அணை முழுவதுமாக நிரம்பி 5 மதகுகளும் திறந்துவிடப்பட்டுள்ளது. . இதனால் இடுக்கி மற்றும் கரையோர மாவட்டங்கள் வெள்ளதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பலத்த மழை தொடர்ந்து பெய்து வருவதால் பம்பை நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.. சபரிமலைக்கு செல்லும் வழியான பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள எல்லா அணைகளும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பம்பை நதியில் அதிக நீர் திறந்துவிடப்பட்டு, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து  திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு தலைவர்அ.பத்மகுமார் வெளியிட்ட அறிக்கையில், பம்பை மற்றும் திரிவேணி நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், சபரிமலைக்கு செல்லும் பாலம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் பக்தர்கள் யாரும் சபரிமலைக்கு வரவேண்டாம். விவரம் தெரியாமல் பக்தர்கள் வந்தாலும், பம்பையிலிருந்து திரும்ப அனுப்பப்படுவர். நிறைபுத்தரிசி  தரிசனம் வழக்கம் போல் நடைபெறும். அதில் எந்த மாற்றமும் இருக்காது. என்று  தெரிவித்திருந்தார்..

இந்நிலையில் கடும் வெள்ளம் காரணமாக அய்யப்பன் கோவிலிலுக்கு கடந்த 2 நாட்களாக பக்தர்கள் யாரும் வரவில்லை. வானம் பிளந்ததுபோல் கோவில் பகுதியில் மழை கொட்டித் தீர்த்து வருவதால்அப்பகுதியே வெறிச்சோடிக் காணப்படுகிறது.

வழக்கம் போல் நிறைபுத்தரிசி பூஜை நடைபெற்றாலும் பக்தர்கள் ஒருவர் கூட இல்லாததால், கொட்டும் மழையில் தந்திரி தனியாக கோவிலில் சோகத்துடன் அமர்ந்திருக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

click me!