கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் தலைமை ஆலோசகராக சுனில் கனுகோலு நியமனம்.. யார் இவர்?

By Ramya sFirst Published Jun 1, 2023, 9:39 AM IST
Highlights

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் தலைமை ஆலோசகராக தேர்தல் வியூக நிபுணர் சுனில் கனுகோலு நியமிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் அமோக வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியதாகக் கூறப்படும் காங்கிரஸ் தேர்தல் வியூகவாதியான சுனில் கனுகோலு, முதல்வர் சித்தராமையாவின் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கர்நாடக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கர்நாடக தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்குப் பின்னால் பணியாற்றிய தேர்தல் வியூகவாதியான சுனில் கனுகோலு, கேபினட் அமைச்சர் அந்தஸ்துடன், முதல்வர் சித்தராமையாவின் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுனில் கனுகோலு கடந்த ஆண்டு முதல் மாநிலத்தில் காங்கிரஸுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். கர்நாடகாவின் பல்லாரி மாவட்டத்தில் பிறந்த அவர் தனது இடைநிலைப் பள்ளிக் கல்வியை அங்கு முடித்தார். சென்னை மற்றும் பெங்களூருவிலும் வசித்து வந்துள்ளார்.

இதையும் படிங்க : நம்பிக்கைக்குரிய பாதையில் இந்தியப் பொருளாதாரம்! ஜிடிபி வளர்ச்சி குறித்து பிரதமர் மோடி பெருமிதம்!

சுனில் கனுகோலு மற்றும் அரசியல்

சுனில் கனுகோலு கடந்த காலங்களில் பாஜக, திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்காக பணியாற்றி உள்ளார். 2016-ல் திமுகவின் நமக்கு நாமே பிரச்சாரத்தை வடிவமைத்தவர். இந்த தேர்தலில் திமுகவால் வெற்றி பெற முடியவில்லை என்றாலும், ஸ்டாலினின் இமேஜை உயர்த்தி இருந்தது. 2017 ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது தமிழின் பெருமை மற்றும் திராவிட மாதிரியின் பல பிரச்சார உத்திகளை வகுத்தார். பின்னர் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநில தேர்தல்களில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பை தேடி கொடுத்தார். 

காங்கிரசுடன் சுனில் கனுகோலு

கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கான வாய்ப்பை பிரசாந்த் கிஷோர் நிராகரித்த பிறகு, இந்தியா முழுவதும் பல சட்டமன்றத் தேர்தல்களுக்கான கட்சியின் தேர்தல் வியூகங்களுக்கு உதவ சுனில் கனுகோலு குழுவில் கொண்டுவரப்பட்டார். கடந்த ஆண்டு மே மாதம், உதய்பூரில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரகடனத்தை நிறைவேற்றுவதற்காக காங்கிரஸால் 2024 பணிக்குழு உருவாக்கப்பட்டது. இந்த குழுவின் உறுப்பினராக சுனில் கனுகோலு நியமிக்கப்பட்டார். சுனிலை தவிர, பி சிதம்பரம், முகுல் வாஸ்னிக், ஜெய்ராம் ரமேஷ், கே சி வேணுகோபால், அஜய் மக்கன், பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா போன்ற முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் அணியில் இருந்தனர்.

இந்தியாவின் தென் முனையான கன்னியாகுமரியிலிருந்து ஜம்மு மற்றும் காஷ்மீர் வரையிலான 4,000 கி.மீ மேலான நீளத்தை உள்ளடக்கிய ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ராவை திட்டமிட்டவரும் இவர் தான். தேர்தல் முடிவுகளில் சமீபத்திய திருப்புமுனைகளுக்கு ஒரு கருவியாக இந்த யாத்திரை அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்து மாணவிகளும் ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்திய பள்ளி நிர்வாகம்? அரசு தீவிர விசாரணை

click me!