5 மாநில தேர்தலில் முக்கிய அம்சங்கள்... வேட்பாளர்களுக்கு கடும் கெடுபிடியுடன் புதிய விதிமுறைகள்

First Published Jan 4, 2017, 5:46 PM IST
Highlights


1. உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் மொத்தம் 690 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதில் 16 கோடி மக்கள் வாக்களிக்க இருக்கின்றனர். 1.85 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் உருவாக்கப்பட உள்ளன.

2. 5 மாநிலத்திலும் போட்டியிடும் கட்சிகளின் ேவட்பாளர்கள் உடனடியாக புதிதாக ஒரு வங்கிக் கணக்கை தொடங்க வேண்டும். இதில் அனைத்து தேர்தல் செலவுக்கான பணத்தையும் வரவு வைக்க வேண்டும். ரூ.20 ஆயிரத்துக்கு  அதிகமாக வரும் பணம், நன்கொடைகள் என அனைத்தும் காசோலையாகவே பெற வேண்டும்.

3. உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் செலவு ரூ.28 லட்சமாகவும், கோவா,மணிப்பூர் மாநிலங்களில் வேட்பாளர்கள் தேர்தல் செலவு ரூ.20 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

4. ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்கு பின் தேர்தல் நடப்பதால், கருப்பு பணம் புழங்குவது ஏறக்குறைய குறைந்துவிடும். அதேசமயம்சட்டவிரோத வழிகளில், வேறுமுறைகளில் அது அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.

5. தேர்தல் ஆணையம் முதல் முறையாக நிரந்தர செயல்பாட்டு விதிமுறைகளை வாக்குப்பதிவு தொடங்கும் 72 மணி நேரத்துக்கு முன்பாக கொண்டு வருகிறது. இதன்படி, தேர்தல் தொடங்கும் 72 மணிநேரத்துக்கு முன்பாக வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

6. இந்த தேர்தலில் முதல் முறையாக வேட்பாளர்கள் ‘ நிலுவையில்லா சான்றிதழ்’(no demand certificate) தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி, கடந்த 10 ஆண்டுகளாக மின்சாரம், குடிநீர், தொலைபேசி, அரசுக்குடியிருப்பில் வாடகை, எதிலும் நிலுவை இல்லை என்ற சான்றிதழ் அளிக்க வேண்டும்.

7. வேட்புமனு தாக்கல் செய்யும் போது, வேட்பாளர்கள் இந்தியக் குடிமகன் மட்டும்தான், வேறுநாட்டில்  குடியுரிமை பெறவில்லை என்ற உறுதிமொழி சான்றிதழ் அளிக்க வேண்டும்.

8.ராணுவம், துணை ராணுவம், பாதுகாப்பு படை ஆகியவற்றில் பணிபுரியும் வீரர்கள் முதல் முறையாக ஆன்-லைனில் தங்களின் வாக்குகளை அளிக்கும் திட்டத்தை ேதர்தல் ஆணையம் அறிமுகப்படுத்துகிறது.

9. வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை (வி.வி.பி.ஏ.டி.) எந்திரங்கள் இந்த முறை அதிகமான பகுதிகளில் பயன்படுத்த நடவடக்கை எடுக்கப்படும்.

10. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், வாக்காளர்களுக்கு  புகைப்படம், பெயர், அடையாளம் ஆகியவற்றுடன் கூடிய வாக்குச்சீட்டு பயன்படுத்தப்படும். அதில் வாக்குப்பதிவு தேதி, நேரம், வாக்குப்பதிவு இடம், அங்கு செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாத விசயங்கள்குறித்து அச்சிடப்பட்ட சிறு கையேடு  கொடுக்கப்படும்.

11. இந்த தேர்தலில் அதிகமான பெண்கள் ஈடுபடுத்தும் வகையில் பெண்கள் வாக்களிக்கும் ஓட்டுச்சாவடிகளில் பெண்களே பாதுகாப்பு, நிர்வாகத்தில் இருக்க வகை செய்யப்படுகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க தேவையான வசதிகள் செய்யப்படும்.

12. வாக்களர்களுக்கு பரிசுகள், கையூட்டு கொடுத்தால்  கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

13.பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6மணி முதல் ஒலிபெருக்கி பயன்பாடு கூடாது. வாக்களிக்கும் போது வாக்கப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டு இருக்கும் மேஜையின் தடுப்பு உயரம் 30 செ.மீ உயரம் அதிகரிக்கப்படும்.

14. 5 மாநிலத் தேர்தல் முடிந்த ஒரு மாதத்துக்குள் வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் செலவுகளை தாக்கல் செய்ய வேண்டும்.

click me!