மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார் ஏக்நாத் ஷிண்டே… துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பு!!

By Narendran SFirst Published Jun 30, 2022, 7:44 PM IST
Highlights

மகாராஷ்டிரா முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுக்கொண்டார். ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆளுநர் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

மகாராஷ்டிரா முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுக்கொண்டார். ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆளுநர் கோஷ்யாரி பதவி பிரமானம் செய்து வைத்தார். முன்னதாக மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40க்கும் மேற்பட்ட சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்கொடி தூக்கினர்.

இதனால், மகா விகாஸ் கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை நடத்த மகாராஷ்டிரா ஆளுநர் அழைப்பு விடுத்தார். மகாராஷ்டிர ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்பு அறிவிப்புக்கெதிராக சிவசேனை கட்சியின் தலைமை கொறடா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான சிவசேனையின் இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் தடையில்லை என உத்தரவிட்டு, வழக்கை வரும் ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்த நிலையில் உத்தவ் தாக்கரே தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இதையும் படிங்க: துணை முதல்வராகிறாரா தேவேந்திர ஃபட்னாவிஸ்? பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறுவது என்ன?

இதனை அடுத்து ஆளுநர் பகத்சிங் கோஷியாரியை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸும், ஏக்நாத் ஷிண்டேவும் மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினர். முதற்கட்டமாக தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக பதவியேற்கவிருப்பதாக கூறப்பட்ட நிலையில், மகாராஷ்டிர புதிய முதல்வராக சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் என தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்தார்.

இதை அடுத்து மகாராஷ்டிரா முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுக்கொண்டார். ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆளுநர் கோஷ்யாரி பதவி பிரமானம் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுக்கொண்டார். 

இதையும் படிங்க: மகாராஷ்டிரா அரசியலில் ஏமாற்றமும் மாற்றமும் , கை ஓங்கிய ஏக்நாத் ஷிண்டே

யார் இந்த ஏக்நாத் ஷிண்டே?

மும்பையை ஒட்டியுள்ள தானேவில் ஆட்டோ ஓட்டுநராக இருந்தவர் ஏக்நாத் ஷிண்டே. அந்த சமயத்தில் பால் தாக்கரேவின் கொள்கைகள் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் சிவசேனாவில் தன்னை இணைத்துக் கொண்டார். அதன் பின்னர் சிவசேனா நடத்தும் அனைத்து போராட்டங்களிலும் தவறாமல் கலந்துக்கொண்டு சிறைக்குலாம் சென்றிருக்கிறார்.

இதுமட்டுமின்றி தான் ஆட்டோ ஓட்டிய தானே பகுதியில் சிவசேனாவின் கொள்கைகள் பற்றி எடுத்துக் கூறியிருக்கிறார். இந்த செயல் கட்சித் தலைமையின் கவனத்திற்கு சென்றது. இந்த நிலையில் கடந்த 1997 ஆம் ஆண்டு நடந்த தானே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு ஏக்நாத் ஷிண்டே கவுன்சிலரானார்.

அதை தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு, தானே எம்.எல்.ஏ ஆகவும் தேர்வு செய்யப்பட்டார். அடுத்த ஆண்டே சிவசேனாவின் தானே மாவட்டத் தலைவராகவும் அவர் பொறுப்பேற்றார். பின்னர் 2014 ஆம் ஆண்டு, சிவசேனாவின் சட்டமன்றக் குழுத் தலைவராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். அடுத்த ஒரு மாதத்தில் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி செய்ய சிவசேனா ஒப்புக்கொண்டதால், ஏக்நாத் ஷிண்டே பொதுப் பணித்துறை அமைச்சரானார்.

பின்னர் 2019 ஆம் ஆண்டு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணியின் ஆட்சி அமைந்த போது, மீண்டும் பொதுப் பணித்துறை அமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றார். இவ்வாறாக அவர் படிபடியாக முன்னேறி தற்போது மகாராஷ்டிரா முதல்வராகும் அளவிற்கு வளர்ந்துள்ளார். சாதாரண ஆட்டோ ஓட்டுநராக தொடங்கிய ஏக்நாத் ஷிண்டேவின் வாழ்க்கை அவரை தற்போது மகாராஷ்டிராவின் முதல்வராக்கி இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

click me!