பயணிகளிடம் தொடர்ந்து கோரிக்கை வந்ததையடுத்து, இணையதளத்தில் இருந்து பதவிறக்கம் செய்யப்படும் இ-ஆதாரை அடையாள அட்டையாக பயன்படுத்திக்கொள்ள ரெயில்வே துறை ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கு முன், அச்சிடப்பட்டு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் ஆதார் அட்டைகள் மட்டுமே அடையாள ஏற்பு ஆவணமாக ஒப்புக்கொள்ளப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ரெயில்வே துறை அமைச்சகம் சார்பில் கூறப்பட்டு இருப்பதாவது-
ஆதார் வழங்கும் அமைப்பான யு.ஐ.டி.ஏ.ஐ.வுடன் பலகட்ட ஆலோசனைக்குப்பின், இணையதளத்தில் இருந்து பதவிறக்கம் செய்யப்படும் இ-ஆதாரை ரெயில்பயணத்தின்போது, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் அடையாள ஆவணமாக பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் ஆதார் அமைப்பால் வழங்கப்படும் ஆதார் அட்டை மட்டுமே ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்தது. இனிமேல், இணைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் இ-ஆதாரும் ஏற்கப்படும். அதுமட்டுமல்லாமல்,ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்யப்படும் இ-ஆதாரையும் அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆதார் அட்டை மட்டுமல்லாமல், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான்கார்டு உள்ளிட்ட 10 வகையான ஆவணங்களை ரெயில்பயணத்தின்போது அடையாள ஆவணங்களாக பயன்படுத்தலாம்.