அமர்நாத் பக்தர்களை காப்பாற்றிய துணிச்சல் டிரைவர்… - “அல்லாஹ் துணை நின்றதாக பெருமிதம்….

First Published Jul 11, 2017, 4:56 PM IST
Highlights
Driver saved the Amarnath devotees


ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஆனந்த்காக் மாவட்டத்தில் அமர்நாத் சென்று திரும்பிய பக்தர்கள் பஸ் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிசூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

ஆனால், அந்த பஸ்ஸை ஓட்டிய முஸ்லிம் டிரைவர் துப்பாக்கி குண்டுகளுக்கு பயப்படாமல், 2 கி.மீ தொலைவுக்கு பஸ்ஸை ஓட்டி 50 பயணிகளின் உயிரைக் காத்துள்ளார்.

அனந்த்காக் மாவட்டம், படேன்கூ மற்றும் கனாபால் பகுதியில் போலீசாரை குறிவைத்து தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களால் நேற்றுமுன்தினம் தாக்குதல் நடத்தினர். இதற்கு போலீசார் தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்றுமுன்தின் இரவு தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடந்தியபோது அமர்நாத் சென்று திரும்பிய பக்தர்கள் பயணித்த பஸ் இடையே புகுந்தது. இதில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பஸ்ஸில் இருந்த பயணிகள் மீது குண்டு பாய்ந்தது.

இதில்  சம்பவ இடத்திலேயே 6 பக்தர்கள் பலியானார்கள், 12 பேர் படுகாயமடைந்தனர்.

இதில் பஸ்சை ஓட்டிய டிரைவர் சலீம் ஷேக் என்பவர் பஸ்ஸை சாதுர்யமாக ஓட்டி,  50-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

தீவிரவாதிகள் பஸ்ஸின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவுடன் பஸ்ஸை நிறுத்தாமல், தீவிரவாதிகளுக்கு எதிராக பஸ்ஸை ஓட்டி, ராணுவ முகாம் வரை 2 கி.மீ தூரம் சென்றுள்ளார்.

அவரின் சாதுர்யமான செயல்பாடுதான் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரை காப்பாற்றியது ஒருவேளை பஸ்ஸை நிறுத்தி இருந்தால், உயிர்சேதம் கடுமையாக இருந்திருக்கும்.

இது குறித்து பஸ் டிரைவர் சலீம் ஷேக் நிருபர்களிடம் கூறுகையில்,  “ அமர்நாத் யாத்திரை முடிந்து வந்து கொண்டு இருந்தோம். இரவு 8 மணி இருக்கும் திடீரென பஸ்ஸை தீவிரவாதிகள் துப்பாக்கியுடன் சூழத்தொடங்கி, சுட்டனர். முதலில் என்னை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர், ஆனால் விலகிக்கொண்டதால், குண்டு என் மீதுபடாமல், எனக்கு பின்னால் அமர்ந்திருந்த பயணி மீது பட்டது.

 பஸ்ஸை நிறுத்தினால், பயணிகள் உயிருக்கு ஆபத்துக்கு என்பதை அறிந்து நான் பஸ்ஸை தீவிரவாதிகளை எதிர்தது பஸ்ஸை ஓட்டினேன் இருந்தும் 6 பேரின் உயிரைக் காப்பாற்றமுடியவில்லை. எனக்கு இந்த அளவுக்கு துணிச்சலை அல்லாஹ் தான் கொடுத்து உதவினார்” எனத் தெரிவித்தார்,

டிரைவர் சலீமை நோக்கி வந்த குண்டு அவர் ஒதுங்கிக்கொண்டதால், ஒரு பயணி மீதுபட்டு அவர் படுகாயமடைந்துள்ளார்.

காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி. முனிர்கான் கூறுகையில், “ நான் பயணிகள் அனைவரிடமும் பேசினேன். அனைவரும், பஸ்ஸின் டிரைவர் சலீமைதான் புகழ்கிறார்கள். சலீம் பஸ்ஸை நிறுத்தி இருந்தால், ஒட்டுமொத்த பயணிகளையும் தீவிரவாதிகள் கொன்று இருப்பார்கள். ஏராளமான பயணிகளை சலீம் காப்பாற்றியுள்ளார்” என்றார்.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த டிரைவர் சலீம்மின் செயலைக் கேட்டு அவரி்ன் குடும்பத்தினர் மிகவும் பெருமை கொள்கின்றனர்.  சலீமின் உறவினர் ஜாவித் கூறுகையில், “ இரவு 9.30 மணி இருக்கும் சலீம் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது, தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள் என்றும் அதில் 6 பயணிகளை மட்டும் காப்பாற்ற முடியவில்லை, மற்ற பயணிகளை காப்பாற்றிவிட்டேன் என்று கூறியபோது பெருமையாக இருந்தது” என்றார்.

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, டிரைவர் சலீமின் செயல் கேட்டு அறிந்து அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஆண்டு வீரதீர செயலுக்கான விருதுக்கு மாநில அரசு சார்பில் பரிந்துரைக்கவும் உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

click me!