“வெண்மை புரட்சிக்கு சொந்தக்காரர்.. அமுலின் தந்தை” - யார் இந்த வர்கீஸ் குரியன் ?

Published : Aug 06, 2022, 06:36 PM IST
“வெண்மை புரட்சிக்கு சொந்தக்காரர்.. அமுலின் தந்தை” - யார் இந்த  வர்கீஸ் குரியன் ?

சுருக்கம்

இந்தியாவின் பால் மனிதர் என்று போற்றப்படுகிறார் டாக்டர் வர்கீஸ் குரியன். யார் இந்த  வர்கீஸ் குரியன் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

1950 மற்றும் 60-களில் இந்தியாவில் பால் மற்றும் பால் பொருட்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கவில்லை. கடைகளில் மிகப்பெரிய டிமாண்ட் இருந்தது. பச்சிளம் குழந்தைகளுக்கு கூட பால் கிடைக்காமல் இருந்த நிலையில், இதில் இருக்கும் சந்தை மதிப்பு மற்றும் மக்களுக்கான அத்தியாவசியத்தை உணர்ந்து அவர் எடுத்த முன்னோடி திட்டத்தினால், பால் பொருட்கள் அனைத்து தரப்பு மக்களையும் இன்றும் எளிதாக சென்று சேர்ந்து கொண்டிருக்கிறது.

வர்கீஸ் குரியன், 1921 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் பிறந்தார். சென்னை லயோலா கல்லூரியில் 1940 ஆம் ஆண்டு இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், சென்னை பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் பொறியியல் பட்டம் பெற்றார். அன்றைய பிரிட்டீஷ் அரசின் உதவித் தொகை மூலம் அணுசக்தி துறையில் வெளிநாடு சென்று படிக்க விண்ணப்பித்தார். 

மேலும் பால் பண்ணை பொறியியல் பிரிவுக்கு உதவித் தொகை கிடைத்தது.வெளிநாட்டில் பயிற்சி முடித்த பிறகு இந்தியா திரும்பிய அவர், குஜராத் மாநிலம், ஆனந்தில் இருந்த பால் பண்ணையில் அரசுப் பணியில் சேர்ந்தார். அங்கு அமுல் என்ற நிறுவனத்தை ஏற்படுத்தி, பால் கூட்டுறவு மூலம் விவசாயிகளின் வாழ்வினை மேம்புறச் செய்த அவரின் திட்டம், படிப்படியாக அரசின் கவனத்தையும் பெற்றது. 200 லிட்டர் பாலில் தொடங்கிய அவரது பால் கூட்டுறவு திட்டம், வெற்றியை நோக்கி சென்றது. 

அரசுப் பணியைவிட்டு கைரா மாவட்டத்தின் பால் யூனியன் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார் குரியன். 1957 ஆம் ஆண்டு முதல் ஆனந்த் மில்க் யூனியன் லிட் என்ற நிறுவனமாக வளர்ந்து அமுல் என பிராண்ட் செய்யப்பட்டது. அரசும் ஒத்துழைப்பு கொடுத்ததால், 1960 -களில் இதேபோன்ற திட்டத்தை நாடு முழுமைக்கும் ஏற்படுத்துமாறு மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

இதனை ஏற்றுக் கொண்ட குரியன் நாடு முழுவதும் பால் கூட்டுறவு உற்பத்தி சங்கங்களை உருவாக்குவதில் தீவிர கவனம் செலுத்தினார். அதனடிப்படையில் தேசிய பால்வள வாரியம் அமைக்கப்பட்டு, அதன் மூலம் பால் உற்பத்தியில் இந்தியாவை தன்னிறைவு தேசமாக உருவாக்கிக் காட்டினார். இந்தியாவின் வெண்மைப் புரட்சிக்கு காரணமான வர்கீஸ் குரியன், இந்தியாவின் வெண்மைப் புரட்சி நாயகன் என அழைக்கப்படுகிறார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!