காணாமல் போன 2 எருமைகள் “பேஸ்புக்” மூலம் மீட்பு! கர்நாடகவில் நடந்த ருசீகர சம்பவம்...

First Published Dec 3, 2017, 3:16 PM IST
Highlights
Disappeared 2 buffalo recovery from Facebook


கர்நாடக மாநிலம் ஹெசகோட் தாலுகாவில் 2 எருமைகள் காணாமல் போன நிலையில், அது பேஸ்புக் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளரிடம் சேர்க்கப்பட்ட ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூருவின் புறநகர் பகுதியான ஹொசகோட் தாலுகாவில் இருப்பது இஸ்துரு கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த நாராயண சாமி என்பவருக்கு சொந்தமான 2 எருமைகள் மேய்ச்சலுக்கு சென்றவை திடீரென காணாமல் போயின. இதையடுத்து, நாராயணசாமி எங்கு தேடியும் தனது 2 எருமைகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் இந்த இரு எருமைகளும் தங்களது முதலாளி வசிக்கும் கிராமத்தைவிட்டு 10கி.மீ தொலைவில் உள்ள நந்தகுடி ஹோப்ளியின் கோட்ராஹல்லி கிராமத்துக்கு சென்றுவிட்டன. அந்த கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்பவர் அந்த 2 எருமைகளையும் பிடித்து கட்டிவைத்து, தீனி வைத்து வளர்த்து வந்தார்.

அதன்பின், இந்த 2 எருமைகளையும் புகைப்படங்கள் எடுத்து, பேஸ்புக்கில் மோகன் பதிவிட்டார். “ 2 எருமைகள் வழி தவறிவந்துவிட்டன, அதை கட்டி வைத்து பராமரித்து வருகிறேன். உரிமையாளர்களுக்கு கிடைக்கும் வரை இந்த புகைப்படத்தை தயவுசெய்து பகிரவும்” என பதிவிட்டு இருந்தார்.

இந்த புகைப்படங்கள் தொடர்ந்து பகிரப்பட்டு, ஒருவழியாக எருமைகளின் முதலாளி நாராயணசாமி வசிக்கும் இஸ்துரு கிராமத்தைச் சேர்ந்த நாகேஷ் என்பவரின் பேஸ்புக் கணக்குக்கு வந்தன.

இதைப் பார்த்த நாகேஷ், இந்த 2 எருமைகளும், நாராயணசாமியுடையது எனக்கூறி, பதில் அளித்து, அந்த புகைப்படங்களை தனது நண்பர் நாராயணசாமியிடம் காண்பித்தார்.

இதையடுத்து, இருவரும் உடனடியாக கோட்ரஹல்லி கிராமத்துக்கு சென்று மோகனைச் சந்தித்து 2 எருமைகளையும் கொண்டு வந்தனர். மோகனுக்கும் நாராயணசாமி நன்றி தெரிவித்தார்.

மனிதர்களை மட்டுமே இணைத்து வந்த பேஸ்புக், இப்போது எருமைகளையும் இணைத்து விட்டது.

click me!