
ரிசர்வ் வங்கியிலும், வங்கிகளிலும் பணம் போதுமான அளவு இருப்பு இருக்கிறது, ஆதலால், டிசம்பர் 30-ந் தேதிக்குப் பின், பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில்டெபாசிட் செய்யும் காலக்கெடு நீட்டிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது.
ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து, கருப்பு பணத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. செல்லாத நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய டிசம்பர் 30-ந்தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வங்கிகளில் பழைய ரூபாய்களை டெபாசிட் செய்தும், ஏ.டி.எம்.களில் பணம் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், மாநிலங்கள் அவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் அருண் ராம் மேக்வால் கேள்வி ரூபாய் நோட்டு தொடர்பான கேள்விக்கு எழுத்து மூலம் பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ ரிசர்வ் வங்கியிலும், வங்கிகளிலும் போதுமான அளவு இருப்பு இருக்கிறது. மக்களிடத்தில் ரூ.100 நோட்டு அதிக அளவு புழக்கத்துக்கு விடப்பட்டுள்ளது.
டிசம்பர் 30-ந்தேதி வரை மக்கள் தங்களிடம் இருக்கும், பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம். ஆனால், டிசம்பர் 30-ந் தேதிக்கு பின், காலக்கெடுவை நீட்டிக்க அரசுக்கு எண்ணம் இல்லை. இது தொடர்பாக அரசு பரிசீலனை செய்து வருகிறது.
கிராமங்கள், சிறு நகரங்களில் செயல்படும் வங்கிகள், மக்களுக்கு போதுமான அளவு சில்லறை நோட்டுகளையும், அதாவது 100 ரூபாய்க்கு குறைந்த மதிப்புடைய ரூ.50, ரூ.20, ரூ10, ரூ.5 நாணயங்களையும் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.
இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில், “ வங்கிகள், ஏ.டி.எம்.களில் எப்போதும் பாதுகாப்பை பலப்படுத்தி வைத்து இருக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவுபிறப்பித்து உள்ளது. ஏ.டி.எம்.களில் கண்காணிப்பு கேமிராவும் எப்போதம் செயல்பாட்டில் இருக்கும் வகையில் விழிப்புடன் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.