பணம் எடுக்கும் கட்டுப்பாடுகள் இன்று தளர்த்தப்படுமா? - போதுமான பணம் இல்லை : வங்கிகள் புகார்

First Published Dec 30, 2016, 5:00 PM IST
Highlights


வங்கிகளுக்கு போதுமான அளவு பணம் சப்ளை செய்யப்படாததால்,  பணம் எடுக்கும் கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்த்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மேலும், வங்கிகளும் போதுமான பணம் இல்லை என அரசுக்கு தெரிவித்துள்ளதால், கட்டுப்பாடுகள் நீடிக்கவே வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது.

நாட்டில் கருப்புபணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்க ரூ. 500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8-ந்தேதி அறிவித்தார். அதைத்தொடர்ந்து மக்கள் வங்கிகள், ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.

தனிபர் ஒருவர் நாள் ஒன்றுக்கு ரூ. 2,500 என்றும் வாரத்துக்கு ரூ. 24 ஆயிரம் என்று மட்டுமே எடுக்க முடியும் என உத்தரவிடப்பட்டது. ஆனால், பணம் வங்கிகளுக்கும், ஏ.டி.எம்.களுக்கும் போதுமான அளவில் சென்று சேராததால், மக்கள் பெரும் பணத்தட்டுப்பாட்டில் சிக்கினர்.

இதற்கிடையே  டிசம்பர் 30-ந்தேதி வரை மட்டுமே இந்த சிரமம் இருக்கும் அதன்பின், அனைத்தும் சரியாகும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். அந்த 50 நாட்கள் நேற்றுடன் முடிந்துவிட்டதால், இன்று முதல் வங்கிகள், ஏ.டி.எம்.களில் போதுமான அளவில் பணத்தை எடுக்க அனுமதி அளிக்கப்படலாம் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ஆனால், அரசிடம் இருந்தோ, ரிசர்வ் வங்கியிடம் இருந்தோ எந்தவிதமான உத்தரவும் வரவில்லை. அதேசமயம், அதிகாரப்பூர்வ மற்ற முறையில், வங்கிகளிடத்தில் மத்திய அரசிடம் பண இருப்பு, நிலவரம் குறித்து கேட்டுள்ளது.

 

அப்போது  மாநில அளவிலான வங்கிகள் குழு(எஸ்.எல்.பி.சி.) தரப்பில் போதுமான அளவில் பணம் இருப்பு இல்லை, சப்ளையும் இல்லை என கவலை தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பணத்தட்டுப்பாட்டை நீக்க மத்தியஅரசு , ரிசர்வ் வங்கியுடன் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதில் நாட்டில் உள்ள 2.25லட்சம் ஏ.டி.எம். களில் ஏறக்குறைய 2 லட்சம் ஏ.டி.எம்.கள் இயங்குவதாகவும், அதில் 1.43 லட்சம் ஏ.டி.எம்.களில் பணம் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 13 ஆயிரம் ஏ.டி.எம்.களில் போதுமான அளவில் பணம் இருப்பதாகவும், மஹாராஷ்டிராவில் 12 ஆயிரம் ஏ.டி.எம்.களில் பணம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ வங்கி முகவர்கள் மூலம் அனைத்து ஏ.டி.எம்,களிலும் பணம் நிரப்ப முயற்சி எடுத்து வருகிறோம். பணத்தட்டுப்பாடு வராது. அதேசமயம், மக்கள் தொடரந்து டிஜிட்டல் முறை பரிமாற்றத்துக்கு மாற வலியுறுத்தப்படுவார்கள்'' எனத் தெரிவித்தார்.

மேலும், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் ஏ.டி.எம்.களில் பணம் இல்லாததால் கடும் பணத்தட்டுப்பாடு நிலவுகிறது எனக் கூறப்படுகிறது.

அதேசமயம், 50 நாட்களுக்கு பின் பணம் எடுக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்துவது குறித்து அரசு அறிவிப்பு ஏதும் வெளியிடாததால், தொடர்ந்து நீடிக்கவே வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

click me!