
உத்தரப்பிரதேசம், மீரட் நகரில், பெண்ணின் ஜன்தன் வங்கிக்கணக்கில் ரூ. 100 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். வங்கிநிர்வாகம் முறையாக பதில் கூறாததையடுத்து அவர் பிரதமர் அலுவலகத்துக்கு புகார் செய்துள்ளார்.
ஜன்தன் கணக்கு
உத்தரப்பிரதேசம் மீரட் நகரைச் சேர்ந்தவர் ஜிலேதார்சிங். இவர் ஒரு டிரான்ஸ்பார்மர் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி சீத்தல் யாதவ். இவர் அட்டைப்பெட்டிகள் செய்யும் நிறுவனத்தில் மாதம் ரூ.5 ஆயிரம் ஊதியத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நகரில் சாராதா சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் ஜன்தன் கணக்கில் கணக்கு வைத்துள்ளார்.
ரூ.100 கோடி
இந்நிலையில், கடந்த 18-ந்தேதி சீத்தல் தனது வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்க ஏ.டி.எம். மையத்துக்கு சென்றார். அப்போது, பணம் எடுத்து விட்டு இருப்பை சரிபார்த்த போது, ரூ.99,99,99,394 இருந்தது. இதைக் கண்டு சீத்தல் திடுக்கிட்டார்.
அதிர்ச்சி
அதன்பின், எந்திரத்தில் ஏதேனும் கோளாறு இருக்கலாம் எனக்கூறி, அருகில் உள்ள யெஸ் வங்கி ஏ.டி.எம். வரிசையில் நின்று இருந்த மற்றொருவரிடம் கூறி தனது வங்கிக்கணக்கில் இருப்பை சோதிக்க கூறி கார்டை கொடுத்தார். அவர் கொடுத்த அந்த இருப்புச்சீட்டை வாங்கிசீத்தல் பார்த்தபோது, ரூ.99 கோடியே 394 இருந்தது கண்டு அதிர்ந்தார்.
அலட்சியம்
இதையடுத்து, தனது வங்கிக்கணக்கில் முறைகேடாக டெபாசிட் செய்யப்பட்ட பணம் குறித்து அறிய வங்கிக்கு அடுத்த இருநாட்களும் அலைந்தும் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. அதன்பின், வங்கியின் மேலாளரிடம் சீத்தல் புகார் அளிக்கவே, அவர் இது குறித்து விசாரிப்பதாகத் தெரிவித்தார்.
புகார்
வங்கி அதிகாரிகளின் அலட்சியமான பதிலால் சீத்தலும், அவரின் கணவர் ஜிலேதர் சிங்கும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, 26-ந்தேதி பிரதமர் மோடியின் அலுவலகத்துக்கு புகார் அனுப்பினர். தன்னிடம் இருக்கும் வங்கி இருப்பு ரசீது நகலையும் மின் அஞ்சலில்இணைத்து அனுப்பியுள்ளார். நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்ய கட்டுப்பாடு இருக்கும்போது மிகப்பெரிய தொகை என் கணக்கில் எப்படி டெபாசிட் செய்யப்பட்டது குறித்து அறிய வேண்டும் என அந்த மின் அஞ்சலில் கேள்வி கேட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.