இளம்பெண் போதையில் தாறுமாறாக ஓட்டிய சொகுசு கார்... விபத்தில் சிக்கி பெண் பலி, சிறுமி படுகாயம்

By vinoth kumarFirst Published Nov 13, 2018, 12:13 PM IST
Highlights

ஆண் நண்பர்களுடன் குடிப்போதையில் இளம் பெண் ஓட்டி வந்த கார், எதிரே வந்த மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் எதிரே வந்த காரில் பயணம் செய்த பெண் ஒருவர் உயிரிழந்தார்.

ஆண் நண்பர்களுடன் குடிப்போதையில் இளம் பெண் ஓட்டி வந்த கார், எதிரே வந்த மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் எதிரே வந்த காரில் பயணம் செய்த பெண் ஒருவர் உயிரிழந்தார். 

டெல்லியை சேர்ந்தவர் ஷிவானி மாலிக் (22). கல்லூரி மாணவி. நேற்று இரவு தனது ஆண் நண்பர்கள் 2 பேருடன், ஷிவானி, கிளப்புக்கு சென்றார். அங்கு மது அருந்திவிட்டு, நள்ளிரவில், இளம்பெண் கார் ஓட்ட, நண்பர்கள் அரட்டை அடித்து கொண்டு சென்றனர்.

பஞ்சாபி பாக் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஷிவானி ஓட்டி சென்ற கார் தறிக்கெட்டு ஓடி, எதிரே வந்த மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதியது. அந்த காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர், கோயிலுக்குச் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.  இந்த விபத்தில் அந்த காரில் பயணம் செய்த 4 பேரும் படுகாயமடைந்தனர். 

அதில், பூனம் (38), அவரது 13 வயது மகள் ஆகியோர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். விபத்தை பார்த்தவுடன், இளம்பெண் ஷிவானியுடன் வந்த ஆண் நண்பர்கள் 2 பேர் அங்கிருந்து தப்பிவிட்டனர். ஷிவானியை மட்டும் அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்தனர். 

தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயமடைந்த தாய், மகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பூனம் பரிதாபமாக இறந்தார். சிறுமிக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஷிவானியை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய 2 ஆண் நண்பர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

click me!