ஆசியாவிலேயே முதல்முறையாக டெல்லி எய்ம்ஸில் தான் இந்த வசதி இருக்கு தெரியுமா?

First Published Nov 28, 2016, 9:23 AM IST
Highlights


ஆசியாவிலேயே முதன்முறையாக மின்னணு முறையில் ‘விர்ச்சுவல் பிரேத பரிசோதனை’ முறை டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.

டில்லியில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனை ஆசியாவின் மிகப் பெரிய மருத்துவமனைகளில் ஒன்றாகும். இங்கு டிஜிட்டல் ரேடியோலாஜிக்கல் துறை சார்பில் முதன் முறையாக விர்ச்சுவல் பிரேத பரிசோதனை எனப்படும் மின்னணு முறையில் பிரேத பரிசோதனை முறை தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் டாக்டர்களின் சாதாரண கண்ணுக்கு கூட தெரியாத எலும்பு முறிவுகள், ரத்த உறைவுக் கட்டிகள் போன்றவை உயர்தர தொழில்நுட்பம் வாய்ந்த டிஜிட்டல் எக்ஸ்ரேக்கள் மூலம் உடல் ஸ்கேன் செய்யப்பட்டு முழுமையாக தெரியவரும். இதன் காரணமாக இறந்தவர் விபத்து அல்லது தாக்கப்பட்டு இறந்தாரா என்பது குறித்த விவரங்கள் இனி மிகத் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.

மேலும் பிரேத பரிசோதனைக்கான நேரமும் கணிசமான அளவு குறையும். இதுகுறித்து எய்ம்ஸ் தடயவியல் துறையின் தலைவர் சுதீர் குப்தா கூறுகையில், வழக்கமான பிரேத பரிசோதனை முறைகளை விட இந்த முறையில் நேரம் மிக மிக குறையும்.

மேலும் சில சிக்கலான வழக்குகளில் எலும்புகள் மட்டுமே கிடைக்கும் நிலையில் இதன் மூலம் துல்லியமான தகவல்களை பெற முடியும். மேலும் உடல்களை உடனடியாக இறுதி சடங்குக்கு கொண்டு செல்ல விரும்பும் உறவினர்களுக்கு இந்த முறையின் மூலம் நேரம் கணிசமாக மிச்சமாகும்.

சிதைந்த நிலையில் உடல்கள் கிடைக்கும் பல்வேறு சிக்கலான வழக்குகளை தீர்ப்பதற்கு இந்த டிஜிட்டல் பிரேத பரிசோதனை முறை மிகவும் உதவிகரமாக அமையும்.மேலும் இவற்றை முழுமையாக எக்ஸ்ரே பிலிம்களில்  பதிவு செய்ய முடியும் என்பதால் முழுமையான சட்ட ஆதாரமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் உடலில் தோட்டாக்கள், ரப்பர் குண்டுகள், இரும்பு துகள்கள் இருந்தாலும் இந்த முறையில் பரிசோதனை மூலமாக காட்டி கொடுத்து விடும். எனவே இதன் மூலம் குற்றங்களை முழுமையாக புலனாய்வு செய்ய இயலும்.

மேலும் இந்த பிலிம்கள், புல்லட்கள் உடலில் மிகச் சரியாக எந்த  இடத்தில் எவ்விதம் பாய்ந்துள்ளது என்பதையும் அப்பட்டமாக காட்டி கொடுத்து விடும் என்றார்.

click me!