நாடாளுமன்ற திறப்பு விழாவை முடிசூட்டு விழாவாகக் கருதும் பிரதமர்! ராகுல் காந்தி விமர்சனம்

By SG BalanFirst Published May 28, 2023, 4:21 PM IST
Highlights

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை பிரதமர் மோடி தனது முடிசூட்டு விழாவாகக் கருதுகிறார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த சில மணி நேரங்களிலேயே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அதனை விமர்சித்துள்ளார். புதிய கட்டிட திறப்பு விழாவை முடிசூட்டு விழாவாக கருதுவதாக அவர் சாடி இருக்கிறார்.

"நாடாளுமன்றம் மக்களின் குரல்! ஆனால், நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை முடிசூட்டு விழாவாக பிரதமர் கருதுகிறார்” என ராகுல் காந்தி இந்தியில் ட்வீட் செய்துள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த ராகுல் காந்தியின் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட 20 கட்சிகள், திறப்பு விழாவைப் புறக்கணித்துள்ளன.

செங்கோலை வைப்பதற்கு முன்பு யோசித்த பிரதமர் மோடி.! ஆதீனங்கள் ஆச்சர்யம் - இதை நோட் பண்ணிங்களா!

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி ஏன் திறந்து வைக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதை விமர்சித்துள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ), எதிர்க்கட்சிகளின் இந்த முடிவை தேசத்தின் ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் அரசியலமைப்பு மதிப்புகளை அப்பட்டமான அவமதிக்கும் செயல் எனக் கூறியுள்ளது.

முன்னதாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கவோ விழாவில் கலந்துகொள்ளவோ அழைக்காததுதான் நாட்டின் மிக உயரிய அரசியல் சாசன பதவியை அவமதிக்கும் செயல் எனவும் ராகுல் காந்தி கூறியிருந்தார். நாடாளுமன்றம் தன்முனைப்பால் கட்டப்படவில்லை, அரசியலமைப்பு விழுமியங்களால் கட்டப்பட்டது என்றும் அவர் கூறினார்.

தன்னை தானே புகழும் சர்வாதிகார பிரதமர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார்: காங்கிரஸ் விமர்சனம்

“ஜனாதிபதி (திரௌபதி) முர்முவை முற்றிலுமாக ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை தானே திறந்து வைக்கும் பிரதமர் மோடியின் முடிவு, நமது ஜனநாயகத்தின் மீதான அவமானம் மட்டுமல்ல, நேரடித் தாக்குதலும் ஆகும்" என புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவைப் புறக்கணித்துள்ள எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.

இன்று முன்னதாக, லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் வடிவத்தை சவப்பெட்டியுடன் ஒப்பிட்டு ட்வீட் செய்ததற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அதற்கு பதிலடி கொடுத்த பாஜக, அது தொடர்பாக தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறது.

பஞ்சாப், காஷ்மீர், ஹரியானா உள்ளிட்ட பல இடங்களில் நிலநடுக்கம்.. முழு விவரம் உள்ளே..

click me!