அருணாச்சலப் பிரதேச எல்லையோரம் 175 கிராமங்களை உருவாக்க சீனா திட்டம்!

By Manikanda PrabuFirst Published Apr 10, 2024, 12:55 PM IST
Highlights

அருணாச்சல பிரதசே மாநில எல்லையோரம் மேலும் 175 கிராமங்களை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது

வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தை தெற்கு திபெத் என்று உரிமை கொண்டாடும் சீனா, அம்மாநிலத்துக்கு ஜங்னான் என்றும் பெயர் சூட்டி அழைத்து வருகிறது. ஆனால், அருணாச்சலப்பிரதேச மாநிலம் இந்தியாவினுடைய பகுதி என இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருகிறது. இருப்பினும், இந்தியாவின் சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்து விட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டப்படுகிறது.

ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையே எல்லை பிரச்சினை நிலவி வரும் நிலையில்,  அருணாச்சல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடுவதும், எல்லையோரங்களில் புதிய கிராமங்களை அமைப்பதும் என சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது. இந்த நிலையில், அருணாச்சல பிரதசே மாநில எல்லையோரம் மேலும் 175 கிராமங்களை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

அருணாச்சல பிரதசேத்திற்கு உட்பட்ட இந்திய-சீன உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு (LAC) அருகே மேலும் 175 எல்லையோர கிராமங்களை உருவாக்கி தனது ராணுவ உள்கட்டமைப்பை மேம்படுத்த சீன அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே சீனாவின் சியோகாங் (வளமான கிராமங்கள்) திட்டத்தின் கீழ் ஏற்கனவே 628 கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 175 எல்லையோர கிராமங்களை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எல்லையோர கிராமங்களை உருவாக்குவது மட்டுமல்லாமல், திபெத் மற்றும் எல்.ஏ.சி.க்கு அருகில் உள்ள பகுதிகளில் விரிவான ராணுவ உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களையும் சீனா செயல்படுத்தி வருகிறது. இந்த கிராமங்கள் சீனாவின் பிராந்திய உரிமைகோரல்களை வலுப்படுத்தவும், எல்.ஏ.சி. அருகே தனது ராணுவத் தயார்நிலையை அதிகரிக்கவும் அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

லடாக் - இமாச்சலப் பிரதேசம் எல்லையோரம் உள்ள தனது 'G-219' தேசிய நெடுஞ்சாலை மற்றும் சிக்கிம் - அருணாச்சல் பிரதேசம் எல்லையோரம் உள்ள தனது 'G-318' தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்தவும் சீனா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திபெத்தை சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்கிற உரிமையை தீவிரமாக வெளிப்படுத்தவும் உள்கட்டமைப்பு மேம்பாட்டை அதிகரித்து பிராந்தியத்தில் தனது அதிகாரத்தை நிலைநாட்டுவதையும் நோக்கமாகக் கொண்ட உத்தியாக சீனாவின் இந்த திட்டங்கள் கருதப்படுகிறது.

Loksabha Elections 2024 முதற்கட்ட தேர்தலில் போட்டியிடும் பணக்கார வேட்பாளர்கள்: சொத்து மதிப்பு என்ன?

முன்னதாக, , அருணாச்சலப் பிரதேசத்தின் மீதான தனது உரிமையை நிலைநாட்டும் முயற்சியாக அம்மாநிலத்தில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள 30 இடங்களின் பெயர்களை தங்களது மொழியில் அண்மையில் சீனா மாற்றியது. இதற்கு முன்பு, அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஆறு இடங்களின் பெயர்களை மாற்றி தரப்படுத்தப்பட்ட பெயர்கள் என்று அழைக்கப்படும் முதல் பட்டியலை கடந்த 2017 ஆம் ஆண்டில் சீனா வெளியிட்டது. 2021ஆம் ஆண்டில் 15 இடங்களை கொண்ட இரண்டாவது பட்டியலையும், 2023ஆம் ஆண்டில் 11 இடங்களுக்கான பெயர்களைக் கொண்ட மூன்றாவது பட்டியலையும் சீனா வெளியிட்ட நிலையில், 4ஆவது பட்டியலை சீனா அண்மையில் வெளியிட்டது.

இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு, இந்திய பகுதிகளை பெயர் மாற்றம் செய்யும் சீனாவின் முயற்சி அர்த்தமற்றது என சாடியது. மேலும், அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகும் எனவும் மத்திய அரசு விளக்கம் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!