2017ஆம் ஆண்டு நிறைவடைய இருக்கிறது. இந்த வருடத்தில், உணவுப் பிரியர்களால் அதிகம் விரும்பி ஆர்டர் செய்து பெறப்பட்ட உணவு எது தெரியுமா? ஆம்.. பிரியாணிதான்!
ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்து பெறுபவர்கள் அதிகம். அப்படி ஆன்லைனிலேயே உணவை வழங்கும் போர்ட்டலான ஸ்விக்கி(Swiggy) நிறுவனத்தின் மூலம், மும்பை, தில்லி, ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, புனே, கொல்கத்தா உள்ளிட்ட பெரு நகரங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி, 2017 இல் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவின் பட்டியலில் சிக்கன் பிரியாணியே முதல் இடத்தை பெற்றுள்ளது.
மசாலா தோசை, இட்லி வடை ஆகிய இரண்டும் பெரும்பாலான இந்தியர்களின் காலை நேர உணவு விருப்பமாக இருந்துள்ளது. மதிய உணவு, இரவு உணவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது பிரியாணிதான். அதுவும் சிக்கன் பிரியாணொ, மட்டன், காய்கறிகள் ஆகியவை சேர்த்து விருப்பப் பட்ட உணவாக தேடப் பட்டிருக்கிறது. அடுத்து, பன்னீர் பட்டர் மசாலா, மசாலா தோசை, தால் மகானி, சிக்கன் ப்ரைட் ரைஸ் இவை வரிசை கட்டுகின்றன.
சிக்கன் பிரியாணியை தொடர்ந்து மசாலா தோசை, பட்டர் நாண், தந்தூரி ரொட்டி, பன்னீர் பட்டர் மசாலா ஆகியவை முதல் ஐந்து இடத்தைப் பிடித்துள்ளன.
பாவ் பஜ்ஜி, சமோசா, பேல் பூரி, சிக்கன் பர்கர், பிரஞ்சு பிரை மற்றும் சிக்கன் ரோல் ஆகியவையும் அதிகம் உண்ணப்பட்ட டிஷ்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
ஃபாஸ்ட் புட் எனப்படும் துரித உணவான பிட்சா, முதல் ஐந்து இடங்களுக்குள் வரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.