
எச்சரிக்கை….3 ஆண்டுகள் சிறை…செல்போன் ஐ.எம்.இ.ஐ எண்ணை அழிப்பவர்களுக்கு ‘செக்’
செல்போன்கள், ஸ்மார்ட்போன்கள் திருடப்படுவதை தடுக்கும் வகையில், ஐ.எம்.இ.ஐ.(சர்வதேச மொபைல் அடையாளஎண்) எண்ணை அழித்தால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க மத்திய தொலைத்தொடர்பு துறை ஆலோசித்து வருகிறது.
இந்திய தந்திச் சட்டம் பிரிவு 25, பிரிவு 7ன் கீழ் திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளன. இதில் பிரிவு 7ன்படி, தொலைத்தொடர்பு விதிமுறைகளும், 25ம் பிரிவு தொலைத்தொடர்பு லைன்கள், எந்திரங்கள் ஆகியவற்றை சேதப்படுத்துவதை குறிக்கிறது இந்த இரு சட்டப்பிரிவுகளிலும் திருத்தங்களைக் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தொலைத்தொடர்பு துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ செல்போன்கள் திருட்டை தடுக்கும் விதமாக ஐ.எம்.இ.ஐ. எண்ணை அழிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கையும், சிறைதண்டனையும் விதிக்க சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது. இது தொடர்பாக அனைத்து பிரிவினர்,மொபைல்போன் தயாரிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. விரைவில் விதிமுறைகள் வௌியிடப்படும். சட்டத்திருத்தம் நிறைவேறினால், ஐ.எம்.இ.ஐ. எண்ணை அழிப்பவர்களுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டு சிறைதண்டனை கிடைக்கும்.
ஒவ்வொரு செல்போனில் இருக்கும் 15 இலக்க ஐ.எம்.இ.ஐ. எண் மூலம் செல்போன்எந்த இடத்தில் இருக்கிறது என்பதை, அழைப்புச் செய்யும்போது, பாதுகாப்பு அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியும். இதில் திருடப்பட்ட செல்போன்களைகள்ளச்சந்தையில் விற்கும்போது, சிலர் ஐ.எம்.இ.ஐ.எண்ணை அழித்து, அதை விற்பனை செய்கிறார்கள். இதனால், குற்றநடவடிக்கையில் ஈடுபடுபவர்களை பாதுகாப்பு அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும், 18 ஆயிரம்மொபைல் போன்களுக்கு ஒரே ஐ.எம்.இ.ஐ எண் இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத் தடுக்கும் வகையில் இந்த புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது ’’ என்றார்.