பச்சை நிறமே… பச்சை நிறமே… - “குப்பை கழிவுகளால் நிறம் மாறி வரும் காவிரி நீர்”

First Published Oct 8, 2016, 11:38 PM IST
Highlights


தமிழகத்துக்கு காவிரி நீர் கொடுப்பதற்கு, கர்நாடக அரசு மறுத்து வருகிறது. முறையான தண்ணீரை வழங்க வேண்டும் என தமிழகம் கேட்டதற்கு, பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இதையொட்டி கர்நாடகத்தில் வாழம் தமிழர்கள் ஏராளமானோர் தாக்கப்பட்டனர். அவர்களது உடமைகள், வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தமிழர்களின் வாகனங்கள் மட்டுமின்றி, தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களும் தீயிட்டு எரிக்கப்பட்டன.

இதுதொடர்பாக தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த 30ம் தேதி, அக்டோபர் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், 3 நாட்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது.

இதனை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, பின்னர் மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என மறுத்து, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதேபோல், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்காத கர்நாடக அரசு, தமிகத்துக்கு தண்ணீர் கொடுக்க மறுத்தது.

இதை தொடர்ந்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 3ம்தேதி, காவிரி மேலாண் வாரியம் அமைக்கும் உத்தரவை நிறுத்தி வைத்து, 7ம் தேதி முதல் 18ம் தேதி வரை விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடவேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில் நேற்று மாலை ஒகேனக்கல் பகுதியில் விநாடிக்கு 1600 கனஅடி நீர் வந்தது. தண்ணீர் பச்சை நிறத்தில் காணப்பட்டது. அதோடு துர்நாற்றமும் வீசியது. கழிவுகளும் நிரம்பியிருந்தன. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுபற்றி விசாரித்ததில், பெங்களூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தினசரி 1482 மில்லியன் லிட்டர் கழிவுநீர் கால்வாய்கள் வழியாக காவிரியில் கலக்கப்படுகிறது. இதுதொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும் தமிழக அரசு ஏற்கனவே வழக்கு தொடர்ந்து கர்நாடகம் கண்டனத்திற்கு ஆளானது. அதன் பின்னர் அவ்வப்போது கழிவுகள் திறந்து விடப்பட்டது.

தற்போது உச்சநீதிமன்றம் வரும் 18ம்தேதி வரை நீர் திறக்கவேண்டும் என உத்தரவிட்ட நிலையில் பெங்களூர் கழிவுகளை வெளியேற்றி அந்த அளவை ஈடு செய்யும் முயற்சியில் கர்நாடகா இறங்கியிருப்பதாக விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

click me!