அமெரிக்க வருவாய்த்துறை அதிகாரிகள் போல பேசி 200 கால்சென்டர்கள் நடத்தி, ரூ.500 மோசடி செய்ததாக பரபரப்பு தகவல்கள் வந்துள்ளது.
தானே மிரா ரோட்டில் போலி கால்சென்டர்கள் நடத்தி, அமெரிக்க குடிமகன்களை தொடர்பு கொண்டு அந்நாட்டு வருவாய் அதிகாரிகள் போல் பேசி, ரூ.500 கோடி வரை மோசடி நடந்துள்ளது. இதில் 70க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு மூளையாக செயல்பட்ட சாகர் தாக்கர் வளைகுடா நாடுகளுக்கு தப்பிவிட்டார்.
சாகர் தாக்கர் வருவாய்த்துறை அதிகாரிகள் போல் மட்டுமின்றி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களிடம் மேலும் பல வழிகளில் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
போலி கால்சென்டர்கள் மூலம் வெளிநாட்டில் சில குறிப்பிட்ட மருந்துபொருட்களை பயன்படுத்துபவர்களின் விவரங்களை சட்டவிரோதமாக அறிந்துகொண்டு, அவர்களுக்கு போன் செய்து தேவையான மருந்து பொருட்களை தருவதாகவும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதேபோல கடன் தருவதாகவும் கூறி வெளிநாட்டினரிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
சுமார் 200 கால்சென்டர்கள் அமைத்து கொல்கத்தா, குர்காவ், நொய்டா ஆகிய நகரங்களை தலைமையிடமாக கொண்டு வருவாய் அதிகாரி போல பேசி அமெரிக்கர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அங்குள்ள கால்சென்டர்களை இழுத்து மூடிவிட்டனர்.
இந்த பண மோசடியில் ஏமாற்றப்பட்டவர்கள், தானே மாநகர கமிஷனர் பரம்பீர் சிங்கிடம், புகார் கொடுத்த வண்ணம் உள்ளனர். புகாரின்படி போலீசார், தீவிரமாக விசாரிக்கின்றனர்.