பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு.. 2 முக்கிய குற்றவாளிகளை கைது செய்த என்.ஐ.ஏ.

By Ramya sFirst Published Apr 12, 2024, 9:46 AM IST
Highlights

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி 2 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே வெடிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 2 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளது. அவர்கள் அத்புல் மதின் தாஹா மற்றும் முசாவிர் ஹுசைன் ஷாசெப் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு சம்பவத்தில் இருந்து இந்த இருவரும் தலைமறைவாக இருந்தனர்.

இதில் ஷாசிப் ஹுசைன் என்பவர் தான் அந்த ஹோட்டல் வளாகத்தில் வெடிகுண்டு வைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும், உளவுத்துறை வழங்கிய தகவல்களின் அடிப்படையிலும்  பல மாதங்களாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதியை என்ஐஏ குழு கண்டுபிடித்தது. இந்த சூழலில் ஷாசிப் ஹுசைனை என்ஐஏ கைது செய்துள்ளது.. 

இந்த ஷாசிப் ஹுசைன் சில தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. மங்களூரு மற்றும் கோவையில் நடந்த சம்பவங்கள் உட்பட குண்டுவெடிப்புகள் மற்றும் சதி வழக்குகளில் தொடர்புடைய தனிநபர்களுக்கும் இதற்கு தொடர்பு இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். எனினும் முழுமையான விசாரணைக்கு பின்னரே விரிவான தகவல்கள் தெரியவரும்.

Rameshwaram Cafe : ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு.. இருவரின் புகைப்படங்களை வெளியிட்ட NIA - 10 லட்சம் சன்மானம்!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணி :

பெங்களூருவில் உள்ள 'ராமேஸ்வரம் கஃபே' உணவகத்தில் கடந்த மாதம் 1ஆம் தேதி நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதில் உணவகப் பணியாளர்கள் 2 பேர் உட்பட 10 பேர் ப‌டுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 

விபத்து நடந்த உணவகம் மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டிடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவிகேமரா பதிவுகளின் மூலம் சந்தேகிக்கப்படும் குற்றவாளியின் முகம் அடையாளம் காணப்பட்டு, அவரது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அவர் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் என்.ஐ.ஏ. அறிவித்துள்ளது.

மேலும் இந்த குண்டு வெடிப்பில் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் எனக் கருதி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்த பயங்கரவாத வழக்கில் தொடர்புடைய சிலரிடம் போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், பெல்லாரியை சேர்ந்த ஷபீர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் நபருடன் இவருக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அவருடன் சேர்த்து இதுவரை மொத்தம் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சிலரது புகைப்படங்களையும் இந்த வழக்கை விசாரித்து வரும் என்.ஐ.ஏ. வெளியிட்டுள்ளது.

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு: பாஜக பிரமுகர் கைது!

இதை தொடர்ந்து முசாவிர் உசேன் ஷாசிப் மற்றும்அப்துல் மதீன் தாஹா ஆகிய இருவரும் தான் ராமேஸ்வரம் கஃபேயில் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்கள் என்று என்.ஐ.ஏ கடந்த வாரம் அறிவித்தது. இந்த இருவரும் கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டது.. மேலும், விசாரணையின் ஒரு பகுதியாக, முக்கிய குற்றவாளிகளுக்கு கைது செய்யப்பட்ட முஸம்மில் ஷரீப் என்பவர் இந்த குற்றவாளிகளுக்கு தளவாடங்களை வழங்கி உதவி செய்ததாக தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!